புத்தகக்காட்சி! 2021
நிறைவடைகிறது புத்தகக்காட்சி!
சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ கல்லூரியில் பிப்ரவரி 24 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி இன்று (மார்ச் 9) நிறைவடைகிறது. கரோனா நெருக்கடிக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரும் அறிவுத் திருவிழா இது என்ற வகையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், பலருக்கும் இந்தப் புத்தகக்காட்சி வெற்றிபெறுவது தொடர்பாகத் தயக்கம் இருந்தது. அவர்களுடைய தயக்கத்தை உறுதிசெய்யும் விதமாக முதல் மூன்று நாட்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. கொஞ்சநஞ்சப் புதிய வரவுகளையும் நிறுத்தி வைத்துவிடலாம்போல என்ற முணுமுணுப்பு எழத் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 27-லிருந்து புத்தகக்காட்சி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது; பதிப்பாளர்களையும் புத்தக விற்பனையாளர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. புதிய வெளியீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கின. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இம்முறை புதிய புத்தகங்களின் வரவு ரொம்பவே குறைவுதான் எனினும் விற்பனையைப் பொறுத்தவரை எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். சென்ற ஆண்டு விற்பனையில் பாதி நடந்தால்கூட வெற்றிதான் என்று சொல்லிவந்த நிலையில், வாசகர்கள் கொடுத்த ஆதரவுக்கரம் பதிப்பாளர்களையும் புத்தக விற்பனையாளர்களையும் எழுத்தாளர்களையும் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. 2020 கொடுத்த நெருக்கடிகளை மறந்துவிட்டு, புதுத் தெம்புடனும் பெரும் மகிழ்ச்சியோடும் விடைபெறுகிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை
Comments