தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை

 சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் பிப்.,8 ம் தேதி வகுப்புகள் திறக்கப்படுகின்றன.



@@இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினாலும், பொது மக்கள் ஒத்துழைப்பினாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 4,629 பேர்கள் சிகிச்சை என்ற நிலையில் உள்ளது. ஜன.,31 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அடிப்படையிலும், ஜன.,29ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனை அடிப்படையிலும், உருமாறிய கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில், கீழ்கண்ட தளர்வுகளுடன் பிப்.,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:


* கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டய படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்.,8 முதல் துவங்கவும், மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


* பள்ளிகள் ( 9 மற்றும் 11ம் வகுப்புகள் மட்டும்) பிப்.,8 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது


* இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்டுப்பாடின்றி இயங்கலாம்.


* நீச்சல் குளங்கள் செயல்படலாம்


* அனைத்து திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி பிப்.,1 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


* கண்காட்சி கூடங்கள் செயல்படலாம்


* உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சம் 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் பிப்., 1 முதல் நடத்தலாம். திறந்த வெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரை அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகளுடன் நடத்த ஏற்னவே அனுமதிக்கப்பட்ட அனுமதி தொடரும்.


* கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.


* உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொது மக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.


* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது.


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.


* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடைமத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.


* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,