வீரபாண்டிய கட்டபொம்மன்

 ஜனவரி 3: 

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று 



ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன்  குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.


அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் 

காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது.1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்

தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்டவீரபாண்டிய கட்டபொம்மனின்  பிறந்த நாள்


தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின்  பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.



வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்:


கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798யில் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன், வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798யில் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799யில் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799யில் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799யில் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799யில் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801யில் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801யில் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801யில் அதனைக் கைப்பற்றியது. ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.



1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. அன்று முதல் இன்று வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரை நினைத்தாலே தமிழர்களின் மனதில் ஒரு எழுச்சி பிறக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாயிற்று..

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தோட்டவேலை கேட்கும் ஜமீன் வாரிசுகள்  (கட்டபொம்மனின்  இன்று)


திருநெல்வேலி: ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின்  பிறந்த நாளான இன்று அவரது வாரிசுகள் இன்னமும் வறுமையில் வாடுகின்றனர்.

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்ற ஜமீனே இல்லாமல் செய்வதற்காக, அங்கு கள்ளிச்செடிகளையும், எருக்கஞ்செடிகளையும் ஆங்கியேர்கள் நட்டுவைத்தனர். அவர்களது வழித்தோன்றல்களை திருச்சியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகுதான் கட்டபொம்மனின் வாரிசுகள் சொந்த பூமியை பார்த்தனர். 1974ல் தி.மு.க.,ஆட்சியின்போது, கருணாநிதி, தகர்ந்து கிடந்த நிலத்தில் மீண்டும் கோட்டை யை எழுப்பினார். அவரது வாரிசுகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால் இன்றைக்கும் கட்டபொம்மனின் வாரிசுகள் வறுமையில்தான் உழல்கின்றனர்.


கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற கட்டபொம்முதுரை, தமது பூட்டனார் விட்டுச்சென்ற கோட்டையிலேயே தவம் கிடக்கிறார். அவரை கோட்டையில் சந்தித்தபோது, ''கட்டபொம்மன் ஆண்ட கோட்டை சுமார் 36 ஏக்கர். தற்போது சுமார் ஆறு ஏக்கரில்தான் கோட்டையும், சுற்றுலா தலமும் அமைந்துள்ளது. கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதியும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டோம் என மற்றவர்கள் கூறிக்கொண்டாலும், ஆங்கிலேய தளபதிகளை வீழ்த்தி இங்கேயே சமாதியாக்கியது பாஞ்சாலங்குறிச்சியில்தான். 1801ல் ஊமைத்துரை படையினரை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயே தளபதிகள் ஜான் கேம்பல், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களது கல்லறை இங்கே உள்ளது. இன்றளவும் வரலாற்றின் நினைவுச்சின்னமாகவும், கட்டபொம்மனின் தீரத்தை சொல்வதாகவும் உள்ளது. ஆனால்அந்த கல்லறையையும் சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.


சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு பேணிபாதுகாக்கப்படவில்லை. 36 ஏக்கரையும் வேலியிட்டு தொல்லியல் துறை பாதுகாப்பதற்காக, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எதையும் தொல்லியல் துறை பாதுகாக்கவில்லை. மேலும் கட்டபொம்மன் வாரிசுகள் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லை. எனவே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே எங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்பட்டது. முன்பு 12 பேர் வேலைபார்த்த கோட்டையில் தற்போது நான்குபேர் மட்டுமே உள்ளனர். வேலையாட்கள் நியமிக்கப்படாததால், தோட்டமும், செடிகளும் பராமரிக்கப்படவில்லை. எங்களுக்கு அரசு வழங்கும் பென்சன் 2 ஆயிரம் ரூபாய்தான். 1974ல் அரசு கட்டித்தந்த வீடுகளும் தற்போது வானம் பார்த்து நிற்கின்றன.எனவே தோட்டவேலை உள்ளிட்ட அடிப்படை வேலையை வழங்கினால், பூட்டனாரின் கோட்டையை பாதுகாப்போம்,'' என்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மன், தீவிர முருகபக்தர். திருச்செந்தூரில் பூஜை முடிந்தபிறகுதான் கோட்டையில் உணவு உட்கொள்வதை வழங்கமாக கொண்டிருந்தார். வீமராஜாவும் தீவிர முருக பக்தர்தான். திருச்செந்தூர் முருகன் கோயிலில், கட்டபொம்மனின் பெயரில் உள்ள ஒருமண்டகப்படிக்கு வீமராஜாதான் இன்றளவும் தலைவர்.

 அதெல்லாம் சரி

... ஆனால் தினசரி சாப்பாட்டிற்கு...




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,