பொங்கல் அவியல்
பொங்கல் அவியல்
________
பொங்கல் நல்வாழ்த்துகள்
வெண்பொங்கலுக்கு சரியான தொடு கறி என்றால் அது இந்த அவியல்தான். காய்கறிகள் அதிகம் விளையும் இந்தப் பருவத்தில் கிடைக்கும் பல வகை காய்கறிகளைக்கொண்டு இந்த அவியல் செய்யலாம்.
சுவையும் சத்தும் அதிகம்கொண்ட இந்த அவியல் 21 வகையான காய்கறிகளைக்கொண்டு செய்தால் சிறப்பு.
முடியாவிட்டால், நம்மால் முடிந்த அளவு காய்கறிகளைக்கொண்டு இந்த அவியலைச் செய்து பொங்கலைக் கொண்டாடுவோம்.
உழவர் திருநாளில் அனைத்து காய்கறிகளையும் சமைத்து சாப்பிட்டால் உழவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையாக கருதப்படுகிறது.
தேவையான பொருட்கள்:-
துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய் மற்றும் மொச்சை , பட்டாணி, கத்திரிக்காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு(எல்லாம் சேர்த்து) - அரை கிலோ
பச்சை மிளகாய் - 6
நல்லெண்ணை- தாளிக்க தேவையான அளவு.
தேங்காய்த் துருவல் - அரை மூடி
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு சிட்டிகை
உப்பு _ தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:-
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை எல்லாம் தண்ணீர் ஊற்றி கழுவி நறுக்கி வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து சிறு தீயில் வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துக் கிளறிக் கொதிப்பதற்கு முன்னால் இறக்கவும்.
வேறொரு வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி, மேலாக கொத்தமல்லி இலை கலந்துகொள்ளவும்.
பொங்கலோடு இந்த அவியலையும் படையலிட்டு உண்ணலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
Comments