தேவிகா பிறந்த நாள் இன்று ஏப்ரல் 25.

 தேவிகா பிறந்த நாள் இன்று ஏப்ரல் 25.




சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
“பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.

- கவிஞர் கண்ணதாசன்




சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய சொந்தப்படங்களின் படு தோல்வியால், அன்றாடம் கடன் தொல்லையில் சிக்கித் தத்தளித்தார் கவிஞர் கண்ணதாசன். இடையில் கோவை செழியனுடன் இணைந்து சுமைதாங்கி படத்தைத் தொடங்கினார் கவிஞர். ஸ்ரீதரின் சுமை தாங்கி கண்ணதாசனுக்கு நல்ல வருவாயைத் தேடித் தந்தது. ஆனாலும் அசல் மலையளவு பாக்கி இருப்பதாக பைனான்ஸியர்கள் வழக்கு போட்டனர்.

கோர்ட் படிகளில் ஏறிய நேரம் போக, கவிஞர் தயாரித்த படம் வானம்பாடி.
சின்னப்பாதேவர் வானம்பாடியைப் பார்த்துப் பாராட்டியதோடு நில்லாமல், மிக நல்ல விலைக்கும் விற்றுக் கொடுத்தார்.

வானம்பாடி வெற்றிச் சிறகுகளை விரித்துப் பறந்ததில் கண்ணதாசனின் துக்கம் தீர்ந்தது.

‘டூயல் ரோலில் திறம்பட சமாளித்திருக்கிறார் தேவிகா. மீனாவின் பயந்த தோற்றத்தில் அவர் முகத்தில் கண்ட கலவரத்துக்கும், கவுசல்யாவின் அலட்சிய பாவத்தில் காணும் செருக்குக்கும் எத்தனை வேறுபாடு!

நீதிமன்றத்தில் தனக்கு வாழ்வளிக்குமாறு தாய் மாமனை தேவிகா கெஞ்சுவது உருக்கமாக இருக்கிறது.’
என்று தேவிகாவின் இரட்டை வேட நடிப்புக்குக் கட்டியம் கூறியது கல்கி.

‘ உணர்ச்சிகளை அமரிக்கையாக அதே சமயம் முழுமையாகச் சித்தரிக்கும் மென்மையான முகம் தேவிகாவுக்கு அமைந்திருப்பதால், நடிப்பு தேவிகாவுக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கிறது!’ என்று குமுதம் தன் விமர்சனத்தில் வியந்தது.

கே. மகாதேவன் - கண்ணதாசன் கூட்டணியில் வானம்பாடியில் ஒலித்த கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், நில் கவனி புறப்படு என ஒவ்வொரு பாடலும் பாதாம் அல்வாவாக இனித்தன.

எப்போது திரையிட்டாலும் அரங்கம் வழியும் கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒன்றாக வானம்பாடி சிரஞ்சீ த்துவம் பெற்றது.

வானம்பாடியின் மற்றொரு சிறப்பம்சம் அதுவே டி.ஆர். ராஜகுமாரி நடித்த கடைசி சினிமா!

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடிக்கும் அரிய சந்தர்ப்பமும் தேவிகாவுக்குக் கிடைத்தது.

1963 கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதம். சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். எனத் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் தேவிகா ஜோடியாக நடித்த, மூன்று படங்களும் வரிசையாக ரிலிஸ் ஆகியிருந்தன.

சென்னை மவுண்ட் ரோடு கெயிட்டி தியேட்டரில் குலமகள் ராதை. அருகில் காசினோ ல் இதயத்தில் நீ, சற்றுத் தள்ளி பாரகன் டாக்கீஸில் ஆனந்த ஜோதி.
தேவிகாவின் நட்சத்திர வாழ்வில் அது ஓர் அரிய நிகழ்வு!

வகுப்பைக் கட் செய்து விட்டு, தேவிகாவின் புதுப்படங்களைத் திரையில் காண க்யூவில் முண்டியடித்தன அரும்பு மீசைகள்.

‘சந்திரலேகா’- கால சர்க்கஸ்காரி டி.ஆர். ராஜகுமாரிக்குப் பின்னர், குலமகள் ராதையில் நடிகர் திலகத்துடன் ‘பார்’விளையாடும் வித்தியாசமான வேடம் தேவிகாவுக்கு.

லீலா என்கிற கதாபாத்திரத்தில் காதல் நாயகனோடு கட்டுக் கோப்பாக, குடித்தனம் நடத்தத் துடிக்கும் இளம் சர்க்கஸ்காரியின் ஏக்கத்தை, அருமையாகப் பிரதி பலித்துக் காட்டினார் தேவிகா. போட்டிக்கு சரோஜாதேவி வேறு.
அகிலனின் ‘வாழ்வு எங்கே ?’ புதினமே ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் குலமகள் ராதை. ‘நீண்ட காலத் தயாரிப்பில் சிக்கும் படங்கள் கண்டிப்பாகத் தோல்வியையே தழுவும்’ என்கிற எழுதப்படாத விதியை குலமகள் ராதை அடியோடு மாற்றிக் காட்டியது.

சினிமா சின்னத் திரைக்குள் அடங்கும் வரையில் எப்போது வெளியானாலும், வசூலை வாரிக்குவிக்கும் வெற்றிச் சித்திரமாக ‘குலமகள் ராதை’ கொலுவிருந்தது.

தேவிகா சர்க்கஸ் வலையில் விழுந்து ஆடிப்பாடி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், கள்ளமலர்ச் சிரிப்பிலே,’ உள்ளிட்டப் பாடல்கள் தேவிகாவின் இயல்பான கவர்ச்சியைத் திரையில் கூடுதலாகக் காட்டின.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும்- தேவிகாவும் ஜோடியாக நடித்த ஒரே படம் என்கிற பெருமைக்குரியது ஆனந்தஜோதி. பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.

பொதுவாக எம்.ஜி.ஆர். பட டைட்டில்கள் எல்லாமே நாயகன் புகழ் பாடுவதாகவே அமையும். அகிலனின் ‘கயல்விழி’ நாவலை ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக’ திரையில் மாற்றி இயக்கியவர் மக்கள் திலகம்.

முதலும் கடைசியுமாக நாயகன் - நாயகி இருவரது பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டப்பட்ட ஒரே எம்.ஜி.ஆர். படம் ஆனந்தஜோதி!

தேவிகாவின் சோக கீதங்கள் ‘நினைக்கத் தெரிந்த மனமே, காலமகள் கண் திறப்பாள் செல்லையா’ இரண்டும் சென்ற நூற்றாண்டில் நேயர்களால் மிக அதிக முறை விரும்பி கேட்கப்பட்டவை.

எம்.ஜி.ஆர். க ஞர் மணிமாறனாகவும் டிரில் மாஸ்டர் ஆனந்தனாகவும் தோன்றினார். நடிப்பில் ‘ஜோதி’யாக ஒளி வீசிய தேவிகாவும்- வாத்தியாரும் இடம் பெற்ற ’ பனி இல்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து... இரண்டு டூயட்களும் இன்றைக்கும் நேயர் விருப்பத்தில் தவறாமல் ஒலிக்கின்றன.
ஆனந்தஜோதி அகன்றதொரு வசூல் வெளிச்சம் பரப்பியும், தேவிகாவுடன் தொடர்ந்து டூயட் பாடுவதை எம்.ஜி.ஆர். ஏனோ ஒரே படத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஸ்ரீதர்-தேவிகா காம்பினேஷனில் அடுத்த சினிமா நெஞ்சம் மறப்பதில்லை. தமிழில் வெளியான முதல் பூர்வ ஜென்ம கதை. வெற்றிகரமாக ஓடியது.
தேவிகாவுக்கு கண்ணம்மா, ஜெயா என்று இரு வேடங்கள். முதல் ஜென்மத்தில் ஜமீனில் வேலை செய்யும் கூலிக்காரப் பெண் கண்ணம்மாவாக தேவிகா!
ஜமீன்தார் எம்.என். நம்பியாரின் மகன் கல்யாண்குமாரை, அவர் ஜமீன் பரம்பரை என அறியாமல் காதலித்து, ஜமீன்தாரால் கொலை செய்யப்படும் பரிதாபத்துக்குரிய வேடம்.

தேவிகா பாடி நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ சோக கீதம், தமிழ் சினிமா படப் பாடல்களில் தனி வரலாறு படைத்தது. பி. சுசிலாவின் புகழை கின்னஸில் எழுதியது.

நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,