மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்

 மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்? 





உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்?


உணவுக்கும் மனநலத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இரவும் பகலும் நம் உடலுக்குள் நடக்கும் இயக்கங்களை நமது மூளை கட்டுப்படுத்துகிறது.


மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆகவே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மனநலத்துக்கு மிகவும் முக்கியம்.


ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கேதார் திலாவே பேசும்போது, "நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும்" என்கிறார்.


உணவுக்கும் மனநலத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? உணவுப்பழக்கங்கள் மனநலத்தை பாதிக்கின்றவா? எப்படி பாதிக்கின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு நிபுணர்களிடம் பேசி பதில்களைப் பெறலாம்.


உணவு எப்படி மனநலனோடு தொடர்புபடுகிறது?


முதலில் மனநலம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனநலனில் மூன்று அம்சங்கள் உண்டு. அவை உணர்வுகள், உளவியல், சமூக நலம் ஆகியன.


நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வாணி குஹால்லி பேசும்போது, "உணவுப் பழக்கமும் மனநலனும் பின்னிப் பிணைந்தவை. உடலுக்கு சத்தான சரிவிகித உணவு தேவை. அது மனநலனோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. மூளைக்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. சரிவிகித உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூளையை நேர்மறையாகச் சிந்திக்க வைக்கிறது, மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கிறது" என்கிறார்.


ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ஜினால் பட்டேல் பேசும்போது, "மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு தொடர்புடையது. நம் உணவோடும் தொடர்புடையது" என்று குறிப்பிடுகிறார்.


பலருக்கு இனிப்பு பண்டங்கள் சாப்பிடப் பிடிக்கும். வேறு சிலரோ ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணவுக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். இனிப்பான உணவுகள் கொழுப்பை சுரக்கின்றன. அதனால் மூளையில் ஹார்மோன்கள் சுரப்பது அதிகரிக்கிறது.


"அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும்போது கார்டிகோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதற்றம், மன அழுத்தத்தோடு தொடர்புடைய ஒரு ஹார்மோனாகும். ஆகவே கொழுப்பான உணவுகள் மூளையை பாதிக்கின்றன."


அளவுக்கதிகமாக இனிப்புகள் சாப்பிடும்போது மூளையின் வேதித்தன்மை மாறுகிறது.


"இந்த ஹார்மோன் தானாக சுரப்பதில்லை. அளவுக்கதிகமாக கொழுப்புசத்து உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது."


உணவுப் பழக்கங்கள் எப்படி மனநலத்தை பாதிக்கின்றன என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறார் மருத்துவர் திலாவே.


"உணவு உண்டு முடித்தபின்பு நாம் மது அருந்தும்போதோ புகையிலை பயன்படுத்தும்போதோ மனப்பதற்றம் அதிகரிக்கலாம்" என்கிறார் திலாவே.


அளவுக்கதிகமான இனிப்புகள் சாப்பிடுபவர்களுக்கு கவனக்குறைவு நோய் (ADHD) உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம் என்கிறார் .


நல்ல மனநலம் வேண்டுமானால் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்?


மூளை நலத்துடன் இயங்கவேண்டுமானால் என்னென்ன உணவுகளைச் சாப்பிடவேண்டும்? மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடவேண்டும்? இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.


மும்பையின் வாக்ஹார்ட் மருத்துவமனையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அம்ரீன் ஷைக் பேசும்போது, "நல்ல உணவு இருந்தால் மூளை அமைதியாக இருக்கும், பதற்றம் குறையும்" என்கிறார். மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் சுரப்பைக் குறைப்பதற்கான உணவுகளை அவர் பட்டியலிடுகிறார்.


"வைட்டமின் சி உள்ள எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, குடை மிளகாய், பெர்ரி வகை பழங்கள் போன்றவை ரத்தத்தில் கார்டிசோல் ஹார்மோன் அளவைக் குறைக்கும். பெர்ரி பழங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். பாலில் உள்ள புரதச்சத்துகள் ரத்த அழுத்தத்தையும் இது தொடர்பான ஹார்மோன்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும். மாவுச்சத்து உள்ள பொருட்களைச் சாப்பிடும்போது மூளையில் செரடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதனால் உணர்வுகள் மகிழ்ச்சியானவையாக மாறுகின்றன. வைட்டமின் பி உள்ள உணவுப் பொருட்கள் அழுத்தத்தைக் குறைக்கின்றன" என்கிறார்.


"கொஞ்சமாக டார்க் சாக்லேட் சாப்பிட்டாலும் நம் உணர்வுகள் மேம்படும்" என்கிறார் மருத்துவர் திலாவே.


உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போது மனச்சோர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். வைட்டமின் டி அளவு சீராக இருக்கும்போது மனச் சோர்வும் கட்டுக்குள் வரும்.


உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் பின்பற்றினால் அது மனநலனை பாதிக்குமா?


உடல் எடையைக் குறைப்பதற்காக பலர் டயட் பின்பற்றுகிறார்கள். இதனால் உடல் எடை வேகமாகக் குறைகிறது. ஆனால் இதனால் மனநலம் பாதிக்கப்படும் என்கிறார் மருத்துவர் ஜினால்.


"உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் கடுமையான டயட்டைப் பின்பற்றுவார்கள். எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையவில்லை என்றால் தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்வார்கள், இது மன அழுத்தம் தரும், மனநலத்தை பாதிக்கும்" என்கிறார்.


குறிப்பிட்ட எடையில், அளவில் உடல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அது அவர்களின் மனநலத்தை பாதிக்கிறது. அனோரெக்சியா போன்ற நோய் உள்ளவர்கள் முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


கொழுப்பு செல்களிலிருந்து சுரக்கும் லெப்டின் என்ற ஹார்மோனைப் பற்றி நிபுணர்கள் விளக்குகிறார்கள். இதுதான் உடல் எடையைக் குறைத்து கொழுப்பின் விகிதத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. லெப்டின் சுரக்கும்போது மூளைக்கு ஒரு சமிக்ஞை போகும். அது நம் உணவை பாதிக்கும்.


"பருமனான உடல்வாகு உடையவர்களின் உடலில் லெப்டின் அதிகமாக இருக்கும். ஆகவே மூளை அதை கவனிக்காது. ஆகவே ஏற்கனவே கொழுப்புச்சத்து உடலில் இருந்தாலும் அவர்கள் அதிகமாக கொழுப்பை உண்பார்கள்" என்கிறார் மருத்துவர் பட்டேல்.


உணவுக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?


மனம் உணவாலானது என்கிறது ஆயுர்வேதம். மும்பையைச் சேர்ந்த ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் விக்ரான் பாட்டீல் பேசும்போது, "நீங்கள் சாப்பிடும் உணவாலானது உங்கள் மனம். ஜுரமாக உணர்கிறேன் என்று சாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால் ஜுரம் அடிக்கும்போது மனம் கோபத்தை உணரும். சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்றால் உடலில் அமிலங்கள் சுரக்கும். அது ஜுரத்தை ஏற்படுத்தும். ஆகவே ஒருவேளை உணவைத் தவிர்த்து இதை குணப்படுத்தலாம்" என்கிறார்.


ஒரு வேளை உணவைத் தவிர்க்கும்போது, ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவை செரிக்க உடலுக்கு நாம் அவகாசம் தருகிறோம்.


இதற்கும் மனதுக்கும் என்ன தொடர்பு?


"இப்படி செய்யும்போது மனம் நலமாக இருக்கும். நல்ல உணவு சாப்பிடும்போது மனதில் நல்ல எண்ணங்கள் வரும். ஆகவே உணவு முக்கியமானது" என்கிறார்.


குழந்தைகள் அதிகமாக துரித உணவு சாப்பிடுகிறார்கள், இது அவர்களின் மனதை பாதிக்குமா?


"துரித உணவில் உள்ள சில பொருட்கள் உடலை பாதிக்கும், மனதை இது மந்தமாக்கும். மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நாம் கவனிக்கவேண்டும்" என்கிறார்.


உணவுக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி யோகா என்ன சொல்கிறது?


"நாம் என்ன சாப்பிடுகிறோமோ மனம் அதனால் பாதிக்கப்படுகிறது" என்கிறோம். உணவு, பயணம், நடத்தை, எண்ணம் ஆகியவை யோகாவின் நான்கு முக்கிய அம்சங்கள். யோகாவின்படி, உணவும் மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உணவு, ஆன்மா, மனம், மூளை, மகிழ்ச்சி என்ற ஐந்து அம்சங்களைப் பற்றி தைத்தரேய உபநிஷத் பேசுகிறது.


யோகா பயிற்சியாளர் திலீப் தாவே பேசும்போது, "நாம் உண்ணும் உணவு உடலை பாதிக்கிறது. பல உடல் பிரச்னைகளுக்கு மனம்தான் ஆணிவேர்" என்கிறார்.


யோகாவைப் பொறுத்தவரை, மனம் அழுத்தத்தில் இருக்கும்போது அது நம் ஆன்மாவின் ஆற்றலைப் பாதிக்கிறது.


"மனம் அழுத்தமாக இருக்கும்போது மூச்சுவிடும் தன்மை மாறுகிறது. அது உணவோடு தொடர்புடையது. உணவு எண்ணங்களைப் பாதிக்கிறது, எண்ணங்கள் உணவைப் பாதிக்கின்றன. சாத்விக், தமசிக், ரஜசிக் என்று யோகாவில் மூன்றுவகை உணவுகள் உண்டு". என்கிறார்.


தமசிக் என்பது ஒழுங்காக சமைக்கப்படாத, அழுகிப்போன உணவு. அது ஆற்றலைக் குறைக்கும், மந்தத்தன்மை தரும்.


ரஜசிக் என்பது காரசாரமான உணவு. அது அதீத ஆற்றல் தரும். ஆகவே மூச்சுப் பிரச்னைகள் வரும்.


சாத்விக் என்பது ஆற்றலை சமப்படுத்தும் காய்கறிகளும் பழங்களும். அது நேர்மறை சிந்தனைகள் தரும்.


உணவு, ஹார்மோன்கள், மனநலம் இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?


வயிற்றில் உள்ள பாக்டீரியா மன அழுத்தத்தை அதிகரிக்கும். தயிர் சாப்பிட்டால் இந்த பாக்டீரியாக்கள் கட்டுக்குள் இருக்கும். தயிர் உணர்ச்சிகளை பாதிக்கும் என்பதால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும். டோபாமைன், செரடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்று அழைப்பார்கள். டோபாமைன் மூளைக்கு நல்லது.


மருத்துவர் அம்ரீன் ஷைக் பேசும்போது, "உடலின் 90% ஹார்மோன்கள் வயிற்றில்தான் சுரக்கின்றன. ஆகவே வயிறு ஆரோக்கியமாக இருக்கவேண்டும்" என்கிறார்.


துரித உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்துகின்றன. அவை வயிற்றிலுள்ள பாக்டீரியாவை பாதிப்பாதால் உணர்வுகள் மாறி மாறித் தோன்றலாம். ஆகவே நிறைய நார்ச்சத்தும் நன்மை செய்யும் பாக்டீரியாவும் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.


நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடவேண்டும் போலத் தோன்றும்.


"மன அழுத்தம் இருக்கும்போது அதிகம் சாப்பிடுகிறோம். சிலர் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அதிகமான இனிப்புகளும் துரித உணவுகளும் சாப்பிடுவார்கள். அது தற்காலிகமான ஓர் ஆறுதலைத் தரும் என்றாலும் அது நல்லதல்ல" என்கிறார் மருத்துவர் ஷைக்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,