காய்கறிக்கடை/ அனன்யா பக்கம்

 காய்கறிக்கடையும் அனன்யாவும்

 காய்கறிக்கடைக்கு போயிருந்தேன். மறு நாள் சமயலுக்கு முதல் நாள் காய் வாங்கிக்கலாம்ன்னு. (ஆனாலும் ஃப்ரிஜ் நிரம்பி வழியறதே? என்னவா இருக்கும் மாயம்?)


நிதானமா என்னென்ன காய்லாம் இருக்குன்னு தேடிண்டு இருந்தேன். அவியல் சாப்பிட்டு கொள்ளை நாளாச்சு. அவியல் பண்ணலாம்.
காய்க்கடைக்கார் தன்னுடைய ஃப்ரெண்டுடன் பேசிண்டு இருந்தார்.
பீன்ஸ் பதினைஞ்சு, காரெட் ஒண்ணு எடுத்து ஒரு பேசின்ல போட்டேன்.
”சின்ன்ன்ன்னனத்தேங்கா இருக்கா? “
குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.
ஒரு தாத்தா ட்ரெண்டியா தொப்பில்லாம் போட்டுண்டு சிரிச்ச முகமா நின்னு கேட்டுண்டு இருந்தார்.
”சின்னத்தேங்கா இல்லியே சார்.....” வருத்தத்துடன் காய்க்கார் சொல்லிண்டு இருந்தார்.
”சின்ன்ன்ன்னத்தேங்கா வேணுமே?” தாத்தாவுக்கு பரம அதிருப்தி.
காய்க்காரரின் நண்பர் உடனே ”நீங்க பாய்க்கடையில போய் வாங்கிடுங்கசார். திறந்து தான் இருக்கும் இப்போ போனா..”
மணி இரவு எட்டரை இருக்கும்.
அடெடே... தி ஆர்ட் அஃப் ஸேயிங் நோ டு கஸ்டமர்ஸ் பத்தி தெரிஞ்சுண்டு இருக்காறே, வெரி குட்ன்னு நினைச்சுண்டேன்.
சேனைக்கிழங்கு கொஞ்சூண்டு வேண்டி வரும். பெரும் பூஷணி இவர்ட்ட இல்லை. ஒரு ஸ்லைஸ் மஞ்சப்பூஷணி வாங்கிக்கணும். பிஞ்சு நூல்கோல் ஃப்ரிஜ்ல இருக்கு. ம்ம் போறும்ன்னு தான் நினைக்கறேன்.
சின்ன்ன்ன்ன்ன்னத்தேங்கா கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தாத்தா மெதுவா கிளம்பி போனார்.
இந்தாள் பெரிய ரோதனை சார். தேங்காயை வாங்கிட்டு நூறு குத்தம் சொல்லுவார்.
அதான்யா பாய்க்கடைக்கு அனுப்பிச்சு விட்டுட்டேன்ல
(பாய்க்கடை மெய்ன்ரோட்டில் இருக்கு. அங்கே ரிட்டன்ஸ் ரீஃபண்ட்ஸ் எதும் கிடையாது)
”தேங்கால்லாம் வைச்சிருக்கேன். சும்மா தொந்திரவு செய்வார் சார்” காய்க்காரர்
”அடப்பாவி வைச்சுகிட்டே இல்லேன்னுட்டியா? ” நண்பர்
தக்காளி வேணும், தேங்காய் அரைச்சு விட பச்சை மிளகாய், கருவேப்பிலை, பச்சைக்கத்தரிக்காய்.. ஹய்யா.. எல்லாத்தையும் நிலுவைல போட்டு வெய்ட் பார்த்து பில்லிங் ஆனதும் பைல போட்டுண்டே இருக்கேன், ட்ரெண்டி தாத்தா திரும்பி வந்தார்.
“நாளைக்கு கார்த்தால ஊருக்கு போறேன். அதான் பிள்ளையாருக்கு தேங்கா உடைச்சுட்டு போகலாம்னு” சிரிச்சுண்டே சொன்னார்
இத்தனை வாட்டி வந்திருந்தாலும் காய்கறிக்கடை பக்கத்துல இருக்கற பிள்ளையார் சன்னிதியை இது நாள் வரை கவனிக்க தவறியிருக்கேன்.
சொட்டேர்ன்னு உடைச்சுட்டு எல்லா சில்லையும் எடுத்துண்டு,”நல்ல தேங்கா”ன்னு சொல்லிண்டே போனார்.
சன்னிதியை எட்டிப்பார்த்தேன்.
கடுகளவு தான் பிள்ளையார். மலையளவு நம்பிக்கை.


-அனன்யா மகாதேவன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,