பிலிம்நியூஸ் ஆனந்தனின் பார்வையில் மக்கள் திலகம்

 


சிவாஜியைப் போன்றே எம்.ஜி.ஆரும் தன் மனதில் தவறெனப் பட்டதை வெளிச்சொல்லக் கூடியவர். அப்பொழுதெல்லாம் ஃபிலிம் நெகட்டிவ்களை மற்ற புகைப்படக் காரர்களைவிடவும் குறைவான விலைக்கு பிரிண்ட் போட்டுக் கொடுப்பது நான் ஒருவன்தான். 2 ரூபாய்க்கு கூட பிரிண்ட் போட்டுக்கொடுத்திருக்கின்றேன். நெகட்டிவிற்கான செலவே 2 ரூபாய்களில் அடங்கிவிடும். இவ்வாறெல்லாம் உழைத்ததை அனைவரும் அறிந்ததன் வாயிலாக நான் பிலிம் சேம்பரில் உறுப்பினாராகியிருக்கின்றேன்.

என்னை புகைப்படக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நான் பிலிம் சேம்பரின் உறுப்பினன் என்பது சிலருக்குத் தெரியாது. அந்தச் சிலருள் எம்.ஜி.ஆர் அவர்களும் அடங்கியிருப்பது என் துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போது தலைவராக இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பின்பாக நடிகர் சங்க தலைவராக எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கின்ற முதல் கூட்டம். நடிகர் சங்க உறுப்பினர் மீட்டிங்கிற்கு எம்.ஜி.ஆர் வருகின்றார். தகுந்த பாதுகாப்புணர்வுடன் இக்கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. உறுப்பினர் கூட்டத்தில் ஒருவனாக என்னைப் பார்த்த எம்.ஜி.ஆர் என்னை மெதுவாக அணுகி, “ஆனந்தன் தப்பாக நினைக்க வேண்டாம். இது உறுப்பினர்களுக்கான மீட்டிங்க், அதனால் நீங்கள் பத்திரிக்கையாளர் என்பதால் தயவு செய்து வெளியில் இருங்கள்”, என்றார்.
எம்.ஜி.ஆர் சொல்கின்றார் என்பதற்காகவும், மேற்கொண்டு அவையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அது என் பேரில் பழியாகி விடும் என்பதாலும் நான் வெளியே சென்றுவிட்டேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த உறுப்பினர்களில் ஒருவரான சோமசுந்தரம், எம்.ஜி.ஆர் அவர்களை நெருங்கி ஆனந்தனும் இதில் உறுப்பினராகயிருக்கின்றசங்கதியைச் சொன்னார்.
தன் செயலுக்கு வருத்தப்பட்ட எம்.ஜி.ஆர் , உடனேயே சோமசுந்தரத்தை அழைத்து, ”ஆனந்தனை அழைத்துவா” என்று சொல்லியிருக்கின்றார். சோமசுந்தரம் வருகின்ற வேளையில் நான் வாசற்படியினைக் கடந்திருந்தேன். என்னை தடுத்து நிறுத்தி, எம்.ஜி.ஆர் கூறியதை என்னிடம் சொன்னார் சோமசுந்தரம். ”நான் ஏதும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, இருப்பினும் எம்.ஜி.ஆர் சொன்னதற்குப் பின்பாக நான் மீறியும் உள்ளேயிருந்து ஏதேனும் தவறான சம்பவங்களுக்கு அவை இடம்கொடுக்குமாயின் எம்.ஜி.ஆருக்கு என்பேரில் தப்பான அபிப்ராயம் ஏற்பட வாய்ப்புண்டு”, என்று என் மனதில் இருந்த விஷயங்களை பிசகாமல் சோமசுந்தரத்திடம் சொல்லி அனுப்பினேன். நானும் மனதில் பட்டதை தயங்காமல் வெளிச்சொல்லக் கூடியவனாகவே இருந்திருக்கின்றேன்.
பின்பு எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையிலேயே அவ்வருடத்தின் பொங்கல்விழாவை சங்கத்தினர் கொண்டாடினர் என்பது கூடுதல் செய்தி.
இதேபோன்று மற்றொரு சம்பவமும் எம்.ஜி.ஆரிடத்தில் எனக்கு நினைவு கூறத்தக்கது. ”நாடோடி மன்னன்”, எம்.ஜி.ஆர் நடித்தும், தயாரித்து, இயக்கமும் செய்த திரைப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படத்திற்கான பிரத்யேக போட்டோக்கள் சிலவற்றையும் நான் படப்பிடிப்புத் தளத்திலேயே எடுத்துவைத்திருந்தேன். அப்புகைப்படங்களுள் சில பத்திரிக்கைகளில் வெளியாகின. படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தது. பின்னர் அத்திரைப்படம் வெளியான முதல் தினத்தின் (ஆகஸ்டு 22, 1958) பொழுதெல்லாம், காலை பத்துமணிக்கு காட்சி என்றால் அதற்குள் பத்திரிக்கையாளர்கள், எல்லாம் திரையரங்கத்தினுள் அமர்ந்திருப்பார்கள், அடுத்த பத்து நிமிடங்கள் கழித்துகூட எந்த பத்திரிக்கையாளர் வந்தாலும் அவர்களுக்கு திரையரங்கத்தினுள் அனுமதி மறுக்கப்படும். ஏனென்றால் பத்து நிமிடங்கள் தாமதாகமாகவந்தவர்கள் படத்தைதவறுதலாக புரிந்துகொண்டு எழுதிவிட்டால், என்னசெய்வது என்பதற்காகத்தான் அவர் இதில் உறுதியாக இருந்தார். இவ்விஷயம் எனக்கு நன்றாகவேத் தெரியும் என்பதற்காக, நான் பத்து நிமிடங்கள் முன்பாகவே ஆஜராகிவிடுவேன். என்னளவில் சில பத்திரிக்கை நண்பர்களையும் காட்சிக்கு வரும்படி உடன் அழைத்து வருவேன். அவர்களும் இப்படத்தைப் பற்றிய செய்திகளை அவரவர் பணிபுரியும் பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். எம்.ஜி.ஆரின் விருப்பத்தின்பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்படுத்துவதும் நானாகத்தான் இருப்பேன். படம் வெளியான தினத்திலிருந்தே மக்களிடத்தில் வரவேற்பும் பாராட்டும் அதிக அளவில் இருந்தது. லாபமும் கூட.
படத்தின் வெற்றியைக் கொண்டாடுவது எனவும் எம்.ஜி.ஆரின் வாயிலாக முடிவுசெய்யப்பட்டது. சி.என்.அண்ணாத்துரை அவர்கள் ”நாடோடி மன்னன்”, வெற்றி விழாவை தலைமை தாங்குவதாக ஒப்புக்கொண்டதும் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தேறின. விழா மேடையில், இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்காக, 120பதக்கங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அப்பொழுதெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் 40, 50 பதக்கங்கள் வழங்குவதே பெரியவிஷயமாக கருதப்பட்டது. அதில் நடித்த நடிகர், நடிகைகள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமான பதக்கங்களின் எண்ணிக்கைதான் நூற்றி இருபது. நாடோடிமன்னன் வெளியான காலகட்டத்திலெல்லாம் பி.ஆர்.ஓக்கள் என்பதற்கான அடையாளங்களே இல்லை. அதனால் எனக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை. என் வேலைக்கும் அங்கீகாரம் கிடையாது.
G.K.ராம் என்பவர்தான் எம்.ஜி.ஆருடன் அநேக பொழுதுகளில் உடன் இருப்பவர்.
நாடோடி மன்னன் கதை ,வசனத்திலும் உதவியாக இருந்தவர். விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர் என்னைச் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க என்னை விசாரித்தார். G.K.ராம் கூறியதன்படி, ”ஆனந்தனுக்கு பரிசு ஏதும் கொடுக்கவில்லையே!”, என்று எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். பின்பு நானே அவரிடம், ”எனக்கு என்ன பெயரில் விருது கொடுப்பது, நான் செய்த வேலைக்கு ஓர் பிரிவேகிடையாதே!” என்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் சமாதானம் ஆகவில்லை, அடுத்த ஒருவார காலத்திற்குள் எனக்காக ஒரு பதக்கம் தனியாக தயார் செய்யப்பட்டு, அவரது அலுவலகத்திலேயே பதக்கத்தை எனக்கு அளித்தார். அது நூற்றி இருபத்தி ஒன்று. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது ஓர் உதாரணம்.
- பிலிம்நியூஸ் ஆனந்தன்
நன்றி: தமிழ் ஸ்டுடியோ.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: