ஆச்சரியமூட்டும் ஆடி மாதம்

 ஆச்சரியமூட்டும் ஆடி மாதம்



ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பார்வதி தேவியின் சக்தி அதிகமாக இருக்கும். அதனால்தான், ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழாக்கள் நடத்திப்படுகின்றன.


ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மிகவும் விக்ஷேமானது. ‘‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி’’ என்பது பழமொழி! ஆடிச் செவ்வாயில் எண்ணெய் தேய்த்து தலை குளித்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.


சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரமாகும். ஆடிப்பூரத்தையொட்டி, ஆண்டாள் அவதரித்த வில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஆண்டாள் அன்னைக்கு அணிவிப்பார்கள்.


திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில், ஆடி மாதத்தில் நடைபெறும் வளைகாப்பு வைபவம் மிகப் பிரசித்தி பெற்றதாகும். சீமந்த விழாவில் அம்பாளின்  வயிற்றுப் பகுதியில் ஊற வைத்த பயறு வகைகளை வைத்துக் கட்டுவார்களாம். ஒரு கர்ப்பிணி போல் காட்சி தரும் அம்பாளை புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால் மழலை பாக்கியம் கிட்டும்.


ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியத்தை அளிக்கும். அன்று மறைந்த முன்னோர்களுக்கு, பிதுர் கடமைகளை செய்தால் ஆண்டு முழுவதும் பிதுர் கடன் தீர்த்த பலன் கிடைக்கும்.


ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் சாற்றப்படும் வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.


‘‘ஆடி வெள்ளி’’ அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில், குடும்ப தெய்வமான பூவாடைக்காரியை (கன்னி தெய்வம்) பூஜித்து வணங்கிட குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.


ஆடி மாத பௌர்ணமி நாளில்தான், ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. இந்நாளில் வைணவ ஆலயம் சென்று ஹயக்ரீவரை வணங்கிட நல்ல பலன் கிட்டும்.


பார்வதி தேவி, பரமசிவனிடம் உடம்பில் பாதியினை மகா விஷ்ணுவுக்குத் தரவேண்டும் என்று தவமிருந்து வேண்டிக் கொள்ள, ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி தந்தார். ஆடி மாத பௌர்ணமியில் உத்திராடம் நட்சத்திரத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இந்த வைபவம் ‘‘ஆடித்தபசு’’ விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


திருமாலுக்கு வாகனமாக அமைந்த கருடன் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.


ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று குருவிற்கெல்லாம் குருவாகத் திகழ்ந்த வியாச முனிவரை நினைத்து வணங்கிட, கல்விச் செல்வம் மேன்மேல் பெருகும்.


கஜேந்திரன் என்ற யானையை முதலைக் கவ்விய போது, அந்த யானையைத் திருமால் காப்பாற்றிய ‘‘கஜேந்திர மோட்ச’’ வைபவம் ஆடி மாதத்தில் நிகழ்ந்தது.


ஆடி மாதம் சுக்ல தசமியில் ‘‘திக் தேவதா விரதம்’’ இருந்து, திக் தேவதைகளை அந்தந்த திசைகளில் வணங்கிப் பூஜித்தால் நினைத்தது நடக்கும்.


ரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக நடைபெறும். அப்போது, பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சித்தருவார்.


அயன்புரம் த. சத்தியநாராயணன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,