கவிஞர் எழுத்தாளர் வாணிதாசன் பிறந்த நாள்

 


தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்பட்ட கவிஞர் எழுத்தாளர் வாணிதாசன் பிறந்த நாள். வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று (ஜூலை 22). புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. வில்லியனூர் பள்ளியில் பயின்றார். அங்கு பாரதிதாசன், இவருக்கு ஆசிரியராக இருந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழும் பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தமிழார்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது.

 இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுச்சேரி திரும்பிய இவர், அங்கு கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

 பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு இவருக்கு ‘செவாலியர்’ விருது வழங்கியது.

* இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் எழுதுவதோடு இல்லாமல் குறுங்காப்பியங்களையும் படைக்கத் தொடங்கினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பான ‘தொடுவான’த்தில் தனது இசைஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றி வந்த வாணிதாசன் 1974-ம் ஆண்டு தமது 59-வது வயதில் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,