*செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள்*

 


*செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள்*


சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பத்மசாலியர் குலத்தவர்கள், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் சிறிய சன்னதியில் மூலவர் வெங்கடேசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னதியில் எழுந்தருளச் செய்தனர்.


இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) மூலவர் விக்கிரகம், அலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தனிச் சன்னதிகளில் பிரதிஷ்டை செய்தனர். அனுமனுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் 30 வருடங்களுக்கு முன் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டன.


இந்த ஆலயத்தில் பேயாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகளும் உள்ளன. தவிர ஆண்டாள் சன்னதியில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் திருமேனிகள் காணப்படுகின்றன. 2001-ம் ஆண்டு ஆலயத்திற்கு நேர்த்தி சேர்க்கும் வகையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.


ஆலயத்தின் ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் சன்னதியைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் உள்ளது. கல் கட்டடமான இந்த மண்டபத்தின் மேற்கூரையில், சதுரமான அமைப்பில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முன்பு துவாரபாலகர்களை நாம் தரிசிக்கலாம். கருவறை முகப்பில் திருமால் சயனக் கோலம், வலது பக்கம் பாவணா மகரிஷி, இடது பக்கம் மார்க்கண்டேய ரிஷி ஆகியோரது சுதைச் சிற்பங்களை காணலாம்.


மூலவருக்கு முன்னால் உற்சவ மூர்த்தியாய் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். சுவாமி கருவறையை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அலர்மேல் மங்கைத் தாயார் தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் மூலவர் மற்றும் உற்சவராக எழுந்தருளியுள்ளார். முகத்தில் புன்னகை மலர நான்கு கரங்களுடன், இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் காணப்படுகிறார். தாயாரின் கனிவான பார்வையில் நமது மனக் குறைகள் நீங்குகிறது.


தென்கிழக்கு மூலையில் ஆண்டாள் சன்னதி உள்ளது. ஆண்டாள் இரு திருக்கரங்களுடன் ஒரு திவ்யமான சேவையை அளிக்கின்றார். ஆண்டாளுக்கு சற்று முன்னால் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ராமர் சன்னதிக்கு நேர் எதிரில் தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சிறிய உருவ வடிவில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வட மேற்கு மூலையில் தனிச்சன்னதியில் மூலவராக முன்புறம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் கண்டு சேவிக்கலாம்.இந்த ஆலயத்தில் திருமணம் கைகூடுவதற்கும், வாழ்வில் மேன்மை பெறவும் பெருமாள் சன்னதியில் வழிபாடு செய்கிறார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலவும், பயம் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்கள்.


செல்வம் பெருக அலர்மேல் மங்கை தாயாரையும், வியாபார தடை நீங்குவதற்கு ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்கிறார்கள்.பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜருக்கும், புனர்பூசம் நட்சத்திர நாளில் முதலியாண்டானுக்கும் சாற்றுமுறை நடக்கிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறும்.


ஆடி மாதம் ஆடிப்பூர விழாவும், ஆண்டாள் அவதார உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, பூராடம் நட்சத்திரத்தில் சேனைமுதலிகள்


சாற்றுமுறை, சதய நட்சத்திரம் அன்று பேயாழ்வாருக்கும், திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாருக்கும் சாற்றுமுறை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது.


மார்கழி மாதத்தில் தனுர் மாத பூஜையும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, போகிப் பண்டிகை போன்றவையும், ஆண்டாள் திருக்கல்யாண சேர்த்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் சங்கராந்தி உற்சவம், கனுப் பண்டிகைகளும், மாசி மாதத்தில் மகம் திருமஞ்சனம் மற்றும் சமுத்திர தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், சேர்த்தி உற்சவம், ராமநவமி மற்றும் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்புடன் நடக்கிறது.


இவ்வாலயத்தில் எந்த ஆலயத்திலும் நடைபெறாத தீப்பந்தத் திருவிழா பக்தஜன சபையினரால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்....

 *சுகமும், ஆரோக்கியமும் தரும் வெந்தயம்*


நன்றி குங்குமம் தோழி


சுகமும், ஆரோக்கியமும் தரும் உணவு வகைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதும், குறைந்த விலையில் கிடைப்பதும் ‘வெந்தயம்’.நார்ச் சத்துக்கள் தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்தால் நமக்கு வரக்கூடிய உடல் பாதிப்புகள் பலவற்றையும் தடுத்து நலமுடன் வாழலாம். மலச் சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும். அதிகமான உடல் எடை கூடாமல் தடுக்கவும் இந்த நார்ச்சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன.


*சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் வெந்தயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயின் பாதிப்பைக் குறைக்க வழி செய்யும். வெந்தயம் கடினமாக இருந்தாலும், நீரில் கரையும் நார்ச்சத்து வகையைச் சார்ந்தது. இதை தினமும் 25 கிராம் வரை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியை உடலுக்குத் தரக்கூடியது. இதை வறுத்து பொடி செய்து சாம்பார், கறி போன்றவைகளுக்கு தாளிதத்துடன் சேர்த்துப் போடலாம்.


* கோதுமை மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைக்கலாம். இட்லி, தோசை போன்றவைகளுக்கு மாவு அரைக்கும் போதே இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்தால் மாவு பொங்கிவரும். இட்லி பூப்போல மென்மையாக இருக்கும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.


*வெந்தயத்தை முளைகட்டி அப்படியேயும் உண்ணலாம். சாலட்டுடன் சேர்த்தும் உண்ணலாம். வெந்தயத்திற்கு பசைத்தன்மை அதிகம். ‘டயட்டி’ல் இருப்பவர்கள் தினமும் உணவு உண்பதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு நீர் குடித்து வர பசி குறையும். உணவின் அளவையும் குறைத்து உண்ணலாம்.


*பசைத் தன்மை அதிகம் கொண்ட வெந்தயம், வயிற்றுள்ளே ஒரு ‘கோட்டிங்’ போலப் படிந்து ஜீரண நீர்கள், அதிகமான அமிலச் சத்து உள்ள உணவுகள், உணவினால் சேரும் அதிக காரம் போன்றவைகளினால் அல்சர் என்னும் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்.


வெந்தயத்தை உணவில் சேர்ப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.


தொகுப்பு : எஸ்.ஜெயப்பிரியா, மதுரை....

 *

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,