ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

 ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:



ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சுப் பழங்கள் மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கவும், ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் வழிவகை செய்கிறது.


இதய நோய்கள்


இதய நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சுப் பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. ஆரஞ்சுப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.


ஈறுகள், பற்கள்


ஆரஞ்சுப் பழங்கள் அதிகம் உண்பதால் வாய் துர்நாற்றம்,

 பற்களிலுள்ள ஈறுகளில் வீக்கம், இரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது போன்ற வாய் மற்றும் பற்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.


 இந்த ஆரஞ்சுப் பழங்களைச் சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வருவதன்மூலம் வாய் மற்றும் பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


ஊட்டச்சத்து


ஆரஞ்சுப்  பழம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவையனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமை, இதயம், இரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.


கண்பார்வை


ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் “எ” சக்தி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கும் மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்றவை இந்தச் சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண ஆரஞ்சுப் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.


சரும நலம்


ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்புத் தன்மை அதிகரித்து இளமைத் தோற்றத்தை உண்டாக்கும். முகம் பொலிவு பெறும். ஆரஞ்சுப் பழச் சுளைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வருவது நல்லது. காலை மற்றும் மதிய வேளைகளில் ஆரஞ்சுப் பழங்களை சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் இரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, தோளில் பளபளப்புத் தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.


எலும்புகள்


உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் அடங்கிய சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். ஆரஞ்சுப் பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதைச் சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.


இரத்த அழுத்தம்


30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் இரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும். ஆரஞ்சுப் பழம் சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் இரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.


சிறுநீரக கற்கள்


சிலர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரஞ்சுப் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது. சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.


நோய் எதிர்ப்பு


எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று போராடுகிறது. உடல்நலனைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  உடலின் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாக மாறி பாதுகாக்கிறது.


 உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழச்சுளைகள் சாப்பிடுவது அவசியமாகும். அல்லது மதிய வேளைகளில் ஆரஞ்சுப் பழத்தைச் சாறு பிழிந்து அருந்துவதும் நல்ல பலனைத்  தரும்.


உடல்வெப்பம்


கோடை காலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் வேனிற் கட்டிகள் தோன்றுவது, நீர்க்கடுப்பு, வயிற்றுப் புண்,  அம்மை நோய், மஞ்சள் காமாலை, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் ஆரஞ்சு அதிகம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சுப் பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது.


டாக்டர். செ. பியூலா செல்வமணி,


இயற்கை மருத்துவ பயிற்சியாளர்,

அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,

அருங்காட்சியகம்,

சென்னை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,