தீபாவளி மலர் -கட்டுரை

வாசிப்பு


      புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. மாக்சிம் கார்க்கி


வாசிப்பு என்ன செய்யப் போகிறது என்றக்  கேள்விக்கு


பதிலளிக்கிறார்கள் பெண்கள்...


    பள்ளி பக்கமே எட்டிப்பார்க்காத ஒரு தாயின் பதில் ஆச்சரியமாக இருக்கிறது...நம்முள் பலர் கல்வி மட்டுமே ஒருத்தரை மேன்மை படுத்தும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்பதற்கு ஒரு சாட்டையடி தான் இது..


    நீ வாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதையோ கற்றுக் கொண்டிருக்கிறாய் என்கிறாள் அந்த தாய் ...நான் முதன்முதலில் அடுப்புங்கரை ஓரமாக அமரந்து சட்னி அரைக்க வாங்கிட்டு வந்த மடித்த பொறி கடலை பொட்டலத்தில் தான் என் வாசிப்பை தொடங்கினேன்...வாசிப்பு என்பது மனித வாழ்வை செம்மைப்படுத்தும் ஒரு பொக்கிஷம் என்றாள் அந்த தாய்...


    நானெல்லாம் மழைக்கு கூட பள்ளி பக்கமே ஒதுங்கினது இல்லை என்கிற துப்புரவுப் பணியாளர் ஒருவரின் வாசிப்பின் தொடக்க கால அறிமுகம் வண்ணதாசன் அவர்களின் கவிதைகள் என்கிறார் ...


     "நிர்ணயித்தபடி வேலை எல்லாம் முடிகிற நேரத்தில் பெய்கிற மழை ஒரு அலாதியான அழகும் கிளர்ச்சியும் கொடுக்கும்."


- வண்ணதாசன்


 


‌      இது தான் அந்த முதல் வாசிப்பு நேசிப்பு காதல் எல்லாம் என்று கூறுகிறார் மாரியம்மாள் ...


   குழந்தைகளிடம் புத்தகத்தைச் சேர்ப்பது மட்டுமின்றி புத்தக வாசிப்பால் கிடைக்கும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கவும் வேண்டும்  அது நம் ஒவ்வொருவரின் கடமை என்கிறார் நாடோடி வாழ்க்கையை வாழும் மூதாட்டி ஒருவர்...


 


     வாசிப்பு பாமர மக்களைக்  கவர்ந்த அளவு படித்தவர்களை கவரவில்லை என்பது உண்மையாகிறது ... அதனால் தான் படித்தவர்கள் வீட்டில் பல பிரச்சனைகளும் பாமர மக்கள் வீட்டில் எதையும் பொறுமையுடன் கையாள வேண்டும் என்ற பக்குவத்தையும் பெறுகிறார்கள்..படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் இன்று விவாகரத்து பட்டத்தையும் விரைவில் வாங்குகிறார்கள்.. குடும்பம் வாழ்வியல் குழந்தைகள் சமுதாயம் இப்படி அடிப்படை சிந்தனை எதை பற்றியும் சிந்திக்காமல் பணம் வேலை தங்களுடைய தேவை இப்படியே ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு புத்தகத்தின் வாசனை நுகரக் கற்றுக் கொடுக்கவேண்டும்..மன அழுத்தத்திற்கு புத்தக வாசிப்பு மருந்து என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள் ...இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும் நம்முள் இருந்தே மாற்றத்தை தேடுவோம்...


ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!


- ஜூலியஸ் சீசர்


 


குழந்தைகளுக்கான சில எழுத்தாளர்கள்:


       பி.டி.ஈஸ்ட்மேன், ராபர்ட் மெக்லோஸ்கே,லாரி லியர்ஸ் , ஜேம்ஸ் ரும்போர்ட் ,தோசி யாருகிட்ட,டரோ யஷிமா ,யுகியோ சுசியோ இப்படி பல வேற்று மொழி எழுத்தாளர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்...தற்போது இவையனைத்தும் இணையத்திலே கிடைக்கின்றன.. ஆரம்பத்தில் குழந்தைகள் அட்டை பக்கத்தை தான் தொட்டு பார்ப்பார்கள் பின்னர் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை ரசிப்பார்கள் மெல்ல மெல்லமாக தான் வாசிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளவார்கள் ... வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள் குழந்தைகளுக்கு இனி ஒவ்வொரு வீட்டிலும் அன்பாலும் புத்தக்த்தாலும் குழந்தைகள் சந்தோஷமாகட்டும்...


 


 


 


--கீர்த்தனா


===================================================================================










 

திரு* வுக்கு


*திரு* விழா



  • *∞∞∞∞∞∞∞∞*


ஒரு எழுத்தாளர்    எப்படி எழுத வேண்டும் என்று   பிரபல எழுத்தாளர்


கல்கி சொன்னதாக…  சென்னை வானொலியில், *இன்று ஒரு தகவல்* என்ற


நிகழ்ச்சியை அளித்ததின் மூலம்   மிகவும் பிரசித்தி பெற்ற  தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்


ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது :


ஒருநாள்,   காஞ்சிபுரம் உபய வேதாந்த    தேசிக சுவாமிகள்,  தன் வீட்டு வேலைக்காரன்


குப்பனைக் கூப்பிட்டு :-   


அடேய் குப்பா…


நீ உடனே


*திரு* பெரும்புதூர் ஓடிப்போய்,


*திரு* வேங்கடாச்சாரியாரைச்     சந்தித்து,


*திரு* க்குடந்தையிலேயிருந்து      இங்கே வந்திருக்கிற,


*திரு* நாராயண ஐய்யங்கார்      சுவாமிகள்,


*திரு* க்கோயில் ஆராதனைக்கு


*திரு* த்துழாய் எடுத்துத்


*திரு* ம்புகையில்,


*திரு* க்குளத்தில்


*திரு* ப்பாசி வழுக்கவே


*திரு* வடி தவறி விழுந்தார்… என்று சொல்லிவிட்டு வா… என்றாராம்...


பிறகு குப்பனைப்பார்த்து,


என்னப்பா…  சொல்லிடுவாயில்ல… அப்படீன்னு கேட்க,


நான் சொல்லிடுவேன் சாமி     என்றானாம் குப்பன்.


 


உடனே,     வேதாந்த தேசிக சுவாமிகள்,    குப்பனிடம்…


எப்படி சொல்லப்போறேன்றத  ஒருதடவை சொல்லிக்காட்டு…


அப்படீன்னு கேட்க,


குப்பனோ,  அதென்ன சாமி;


கும்பகோணத்து ஆசாமி 


குட்டையில விழுந்தார்ன்னு


சொல்லுவேன்…


அப்படீன்னானாம்… 


சொல்றத எப்படிச் சுவாரசியமா சொல்லனும்ன்னா…


தேவைக்கு அதிகமா வளர்த்தக் கூடாது…என்று கல்கி சொன்னதை  


அந்த நிகழ்ச்சியில்   நினைவுபடுத்தினார் தென்கச்சி சுவாமிநாதன்...


 


சமீபத்தில்,


ஒரு காணொளியில்,   தென்கச்சி அவர்கள்   மேலே சொன்னதை காணும் 


வாய்ப்பு கிட்டியது. 


உடனே,


எனக்குள்,   ஒரு எழுத்தாளன்   தேவைக்கு அதிகமாக


வளர்த்தக்கூடாது  என்பதைவிட


*திரு* … *திரு* … என்று 


*திரு* ம்பத் *திரு* ம்ப வந்த சொல் மிகவும் கவர்ந்தது.


அதன் விளைவாக,


என்னுள் தோன்றிய 


*திரு* பற்றிய


ஒரு தொகுப்பு.


------------------------------


*திரு* க்குறள்


     உலகப் பொதுமறை


     என்பதில் மாற்றுக்


     கருத்து இல்லை…


 


*திரு* வாசகத்திற்கு


     உருகாதார் 


     ஒரு வாசகத்திற்கும் 


     உருகார்…


*திரு* ப்பரங் குன்றத்தில்


     நீ சிரித்தால்


*திரு* த்தணி மலைமீது


     எதிரொலிக்கும்…


*திரு* ப் புகழைப் 


     பாடப் பாட


     வாய் மணக்கும்…


     


     என்ற பாடல் வரிகள்,


     மிகவும் பிரபலம்...


 


*திரு* அருட் பிரகாச 


  வள்ளல் வடலூரார்,


*திரு* வாய் மலர்ந்து


  அருளியது


*திரு* அருட்பா…


 


*திரு* மந்திரமாலையை


     அருளிய


*திரு* மூலர்


     சேக்கிழாரால் புகழப்பட்ட


     63-வரில் ஒருவர்…


     பதினெண் சித்தர்களில்


     ஒருவர்…


*திரு* மூலர் வரலாற்றை 


     நம்பியாண்டார் நம்பிகள் 


*திரு* த்தொண்டர்,


*திரு* வந்தாதியில்


     கூறியுள்ளார்...


 


*திரு* முறை ஓதுபவர்கள் 


     ஆரம்பத்திலும் முடிவிலும் 


*திரு* ச்சிற்றம்பலம்


     என சொல்வார்கள்...


 


*திரு* முறைகள்


     பன்னிரண்டு…


 


*திரு* நீறு சைவர்களால்


     நெற்றியில் இடப்படும்


     புனித அடையாளம்…


 


*திரு* வையாற்றில்,


     ஆண்டுதோறும்


     தியாகராஜ ஆராதனை விழா,


     என்ற இசை நிகழ்ச்சி


     ஐந்து நாட்கள்


     நடைபெற்று வருகிறது. 


 


*திரு* டாதே படத்தில்


     ஒருபாடலின் வரிகளான


*திரு* டானாய்ப் பார்த்து


*திரு* ந்தா விட்டால்


*திரு* ட்டை ஒழிக்க முடியாது,


     என்ற வரிகள்


     என்றும் பொருந்தும்…


 


*திரு* விளையாடல்


     படத்தில் வந்த


     *தருமி, ஹேமநாதர்*


     பாத்திரங்களை என்றுமே,


     மறக்க முடியாது…


 


*திரு* வண்ணாமலை


     தலத்தினை நினைத்தாலே


     முக்தி தருமாம்.


 


*திரு* வாரூர் தேர்


     ஆசியாவிலேயே


     மிகப்பெரிய தேர்…


*திரு* வாரூர் தேர்


     96-அடி உயரமும்


     360-டன் எடையும் கொண்டது...


*திரு* வாரூர் தேரோட்டம்


     உலகப்புகழ் வாய்ந்தது…


 


*திரு* ப்பதிக்கே லட்டா


*திரு* நெல்வேலிக்கே அல்வாவா


     என,     நையாண்டியாக


     சொல்வதுண்டு…


 


*திரு* க்கடையூரில்


     வேள்வி செய்தால்


     ஆயுள் நீடிக்குமாம்...


 


*திரு*.வி.க. என்பதன்


     விரிவாக்கம்


*திரு* வாரூர் விருத்தாசலம்


     கலியாண சுந்தரனார்…


 


*திரு* *முருக* 


     என்ற அடைமொழியுடன்


     கிருபானந்த வாரியாரை


     அழைப்பதுண்டு…


 


*திரு* ட்டு முழி


*திரு* திருன்னு முழி


     என      சிலரை சொல்வதுண்டு…


 


*திரு* ம்பத் *திரு* ம்ப


*திரு* ப்பித் *திரு* ப்பி


     என சொல்வது      வழக்கத்திலுண்டு…


 


*திரு* டா 


*திரு* டி


     என்ற படத்தில்


     இடம்பெற்ற பாடலான


     *மன்மத ராசா,*


     மிகவும் பிரபலமான


     பாடல்களில் ஒன்று…


  


*திரு* நங்கை என


     மூன்றாம் பாலினத்திற்கு


     அழகு சேர்த்தது தமிழ்…


 


*திரு* மணம் 


     காலம் காலமாக 


     மகசூல் அளிக்கக்


     கூடியது என்பதால்


*திரு* மணம் என்பது 


     ஆயிரம் காலத்து பயிர்


     எனக் கூறுகிறார்கள்..


 


*திரு* வாளர்


     என ஆண்களையும்,


*திரு* மணமான பெண்களை


*திருமதி* யெனவும்


     அழைப்பதுண்டு…


 


*திரு* மணம்


     காலத்தே நடைபெற


*திரு* மணஞ்சேரி…


*திரு* விடந்தை…


     என்ற இடங்களிலுள்ள


     கோவில்களுக்குச் சென்று


     வேண்டிக் கொள்வர்…


 


*திரு* வாய் 


     மலராதோ வென,


     அமைதி காப்பவரிடம்


     கேட்பதுண்டு…


 


*திரு* விழா


     நடைபெறும் இடங்களில்


*திரு* டுக்கு


     பஞ்சமிருக்காது…


*திரு* டர்களின் கைவரிசை


     சர்வ சாதாரணமாயிருக்கும்


*திரு* டர்கள் ஜாக்கிரதை


  என்ற காவல் துறையின்


  அறிவிப்பை கேட்கலாம்…


 


*திரு* டன் என்பதை


*திரு* டர் என்று


*திரு* த்தம் கொண்டுவர


*திரு* டர்கள் சங்கம்


  முடிவு செய்துள்ளது…


 


*திரு* ச்சிக்கு அருகிலுள்ள


*திரு* வானைக்காவல், 


  அல்லது 


*திரு* ஆனைக்காவல்,


  எனப்படும் 


*திரு* வானைக்கோவில்,


  ஆனை தொழுத


*திரு* க்கோவிலென


  சொல்வதுண்டு…


 


*திரு* ச்சி மாவட்டத்திலுள்ள


*திரு* வெறும்பூர் என்று 


  தற்போது அழைக்கப்படும்


*திரு* எறும்பியூர்,


*திரு* ச்சியிலிருந்து


  தஞ்சை செல்லும் பாதையில்


  13 கிலோமீட்டர்கள் 


  தொலைவில் உள்ளது.


*திரு* வெறும்பூரிலுள்ள


  எறும்பீஸ்வரர் கோயில் 


*திரு* நாவுக்கரசரால் பாடல் பெற்ற


  சிவாலயமாகும்.


 


*திரு* ப்பாம்பரம்


  என்ற ஊரில் உள்ள


*திரு* ப்பாம்பரம் 


  சேஷபுரீஸ்வரர் கோயில்,


  பாம்பு தொழுததால்,


*திரு* ப்பாம்புரம்


*திரு* க்கோவில்…


  எனப் பெயர் கொண்டதாம்…


*திரு* ப்பாம்பரம் 


  தலத்தினை தரிசித்தாலே


  நாக தோஷ பரிகார தலங்கள்


  அனைத்தையும் தரிசித்த


  பலன் கிட்டுமாம்…


*திரு* ஞானசம்பந்தர் 


  தன் தேவாரப் பாடல்களிலும்…


*திரு* நாவுக்கரசர் தனது


*திரு* த்தாண்டகத்திலும்……


*திரு* ப்புகழில்


  அருணகிரிநாதரும்…


  இத்தலத்தைப் பற்றிக்


  குறிப்பிட்டுள்ளனர்…


 


*திரு* நள்ளாரிலுள்ள


*திரு* த்தலம்…


  சனிபகவானுக்குரிய 


  பரிகாரத் தலமாகும்…


 


*திரு* நாகேசுவரத்திலுள்ள


*திரு* க்கோவில்…


  நவக்கிரகங்களில் ஒன்றான


  ராகுவுக்கான தனிக்கோவில்…


 


*திரு* ப்பதிக்கு


  ஆண்டுக்கு ஒருமுறை


  சென்னையிலிருந்து


  குடை கொண்டு 


  செல்லப்படுவதை


*திரு* ப்பதி குடை,


  கவுனி தாண்டுகிறதென்பர்…


 


*திரு* ப்பதியிலிருக்கும்


*திரு* மலைக் கோவிலின்


  ஆண்டு வருமானம்


  உலகத்திலுள்ள கோவில்களில்


  இரண்டாம் நிலையிலுள்ளது…









  

 

சங்கநூல்கள் தொகுப்பில் 


பத்து, பாட்டு நூல்களும், 


எட்டு, தொகை நூல்களும் 


இடம்பெற்றுள்ளன. 


இந்த 18 நூல்களையும் 


மேல்கணக்கு எனவும்


கீழ்க்கணக்கு என்றும்


வழங்கப்படுகின்றன.


 


*திரு* முருகாற்றுப்படை 


     பாட்டுநூல்கள் பத்தில் 


     முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. 


     இதனைப் பாடிய புலவர் நக்கீரர்.


 


*திரு* என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. தற்காலத்தில் 


ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர்


முற்கால வைணவ இலக்கியங்களிலேயே


*திரு* வரங்கம் என்று குறிக்கப்பட்டுள்ளது.


 


மேலும்,


 


*திரு* மால்,


*திரு* மகள்.


*திரு* வடி, 


*திரு* நாமம், 


*திரு* வோடு, 


*திரு* வருள், 


*திரு* ப்பணி, 


*திரு* த் தந்தை, 


*திரு* ச் சபை,


*திரு* முறை, 


*திரு* மந்திரம், 


*திரு* உளச்சீட்டு,


     ( *திரு* மணப் 


     பொருத்தம் பார்க்க)


*திரு* ச்சரடு (தாலி), சொற்களும் புழக்கத்திலுண்டு.


 


சிலைகளுக்கு *திரு*உருவச்சிலை எனவும் அழைப்பதுண்டு.


 


1937-ஆம் ஆண்டு,


சென்னையில்,   (அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்), காங்கிரசு ஆட்சி அமைந்ததும்,


அரசின் அஞ்சல்களில்,  அனைவருக்கும் *'ஸ்ரீ'* என்ற   அடைமொழிச் சொல்லைப்


பயன்படுத்தக் கூறி  அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியது.


1940-ஆம் ஆண்டு 


ஆகஸ்டு மாதம் நான்காம் நாள், 


திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு, 


*'ஸ்ரீ'* எனும் சொல்லுக்குப் பதில் 


*'திரு'* எனும் தமிழ் வார்த்தையையே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக்கொண்டது.


நிறைவாக,


 


*திரு* வாரூரிலிருந்து


  10 கி.மீ. தூரத்திலிருக்கும்


*திரு* க்குவளை


  என்ற ஊரில் பிறந்து,


  தமிழகத்தின் முதல்வராக


  ஐந்து முறை இருந்து,


  தற்பொழுது ஓய்விலுள்ளவர்


  கலைஞர் மு. கருணாநிதி…


 


 


    *ஏ. இளவரசு*


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,