கார்த்திகை தீபம்


*கார்த்திகை தீபத்திரு நாள் கொண்டாட்டம் 


கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான்.கடைசி நேரத்திலே விளக்குகள்  வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் போன வருஷம் பயன்படுத்திய பழைய அகல் விளக்குகள் இருந்தாலும்,சாஸ்திரத்திற்காக  ஆறு புதிய அகல் விளக்குகள் மட்டுமாவது வாங்குவது நல்லது.


மண் அகல் விளக்குகளுடன்,   நம் வீட்டிலுள்ள மற்ற (பித்தளை, வெள்ளி, செம்பு) விளக்குகளையும் ஏற்றுவதால் நம் வீடு தீப ஒளியில் பிரகாசிக்கும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.


புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி  விளக்குகளை  நான்கு மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இந்த முறையில் செய்வதால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய்  கசிந்து விடாமல் இருக்கும்.


4மணி நேரம் கழித்து அதை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியத்தை மின் விசிறி இருக்கும் இடத்திலோ வெயில் படும் இடத்திலே காயவைத்து எடுக்க வேண்டும்.


பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.


காய்த்த மண் அகல் விளக்குகளை எடுத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைப்பதால்  மங்களமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.


நிறைய விளக்குகளுக்கு பொட்டு வைக்க வேண்டியுள்ளதால்  சந்தனம் கரைத்த கிண்ணத்தில்  ஒரு பட்ஸ்சும், குங்குமத்தில் ஒரு பட்ஸ்சும் போட்டு வைத்து கொண்டு போட்டு வைக்கவும். குங்குமத்தை தொடுவதற்கு முன்னால் தண்ணீர் தொட்டு அதன் பிறகு எடுக்கவும்.


சில சந்தனம் நிறம் இல்லாமல் இருக்கும். நிறம் கிடைக்க சிறிது மஞ்சள் தூள் கலந்து பயன் படுத்தவும்.


எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை.


காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். நெய் விலை அதிகம் என்பதால் அனைவராலும் வாங்கமுடியாது என்பதால் இந்த டிப்ஸ்.


எண்ணெய் ஊற்றிய பின்தான் திரி போடவேண்டும். பஞ்சு திரி மிக மெல்லிதாக இருந்தால் இரு திரியை ஒன்றாக்கி ஒரே திரியாக போடலாம். இருதிரி போட்டு ஏற்றுவதால் வெளியே வைக்கும் விளக்குகள் காற்றில் அணையாமல் இருக்கும். வீட்டிற்குள் ஏற்றும் விளக்குகளுக்கு இரு திரி தேவை இல்லை. ஒரு திரியே போதுமானது.


விளக்கை தரையில் வைக்காமல் ஒரு சிறு தட்டின் மீதோ , வெற்றிலை மீதோ, வாழை இலையை சதுரமாக வெட்டி அதன் மீதோ வைக்கலாம். பாக்கவும் அழகாக இருக்கும். தரையிலும் எண்ணெய் வடியாது.


தீபங்கள் அனைத்தையும் வாசலில் ஏற்றி பிறகு வீட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்வது மகா லக்ஷ்மியை  நம் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.


சாயந்திரம் வாசல்  தெளித்து அலம்பிட்டு, அழகான கோலங்கள் போட்டு அதன்மீது விளக்குகளை வையுங்கள்.


பச்சை அரிசியை முதலிலேயே ஊற வைத்து கோலம் போட வேண்டும். நேரம் இல்லை என்றால் அரிசிமாவு கொண்டு கோலம் போடவும். காவி நிறத்தை கோலத்தை சுற்றி வர்ணம் தீட்டவும். காவி நிறம் சிவசக்தி வடிவமாக கருதப்படுகிறது.


காலையிலேயே தலைவாசல் படிக்கு மேலே மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை தோரணம் விசேஷ நாட்கள் மட்டும் இல்லாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கட்டுவது நல்லது.


காய்ந்த மாவிலையை கழட்டி விட வேண்டும். மாவிலை தோரணம் கெட்ட சக்திகள் வருவதை தவிர்க்கிறது. திருஷ்டி ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வளையமாக அமைகிறது.


சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து  தீபொறிகள்  கங்கையில் விழுந்து ஆறு குழந்தையாக , முருகப் பெருமான் தோன்றியதால், சிவபெருமானுக்கு பொரி உருண்டை செய்து நிவேத்தியம் செய்வது விசேஷம்.


சில வீடுகளில் மாவிளக்கு எடுப்பதும், கொழுக்கட்டையை அகல் விளக்கு போல் செய்து ஆறு தீபமாக ஏற்று வழிபடுவதும்  உண்டு.


குத்து விளக்கு பூஜை  கார்த்திகை தீபத்தன்று  செய்வது மிகச்  சிறந்த பலனை அளிக்கும். குத்து விளக்கு தண்டு பகுதியில் பூ அல்லது மஞ்சள் கயிறு சாற்றி வழிபடவும்.


தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:
***********************


• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.


• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.


• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.


• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.


• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.


• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.


தீபம் ஏற்றும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
**************************


"துன்பம் அகற்றும் மலை 
தொல்வினையை நீக்குமலை, 
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை 
தன்பகத்தைக் காட்டுமலை 
தன்னைக் கருத்தில் உறும் அன்பர் 
இடர் வாட்டுமலை அண்ணாமலை.'' 


பொருள்: 
நம் துன்பங்களைப் போக்குவதும், முற் பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. 


 இந்தப்பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. 


தீபம் ஏற்றும் சமயத்தில் இன்று
கூறவேண்டிய ஸ்லோகம்:


 தீப வெண்பா:
****************


“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்
சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகைத் தீபம் ”


அருணாச்சல புராணத்தில் உள்ள சுலோகம்:


கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்லாது உலகின் மன்னி வாழ்வார். பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு தவிரும் அது பணிந்தோர், கண்டோர் கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு முத்தி வரம் கொடுப்போம்.


என்று அருணாச்சல புராணத்தில் சிவன் கூறி உள்ளார்.


அண்ணாமலையாருக்கு அரோகரா !


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,