பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி விருது
இன்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி விருது
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகள் வழங்கினார்.
இதன்படி, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவற்றை திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் அமைச்சரின் விருது கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 2வது பரிசு திண்டுக்கல் காவல் நிலையம், 3வது பரிசு தருமபுரி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னிமலை குன்னாங்காட்டுவலசை சேர்ந்த யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
இதேபோன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சாமர்த்தியமாக மீட்ட நாகை தீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பிரிவில் ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்களின், வினித் சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார், தனலட்சுமி, வினோதினி, இந்திராகாந்தி மற்றும் பழனியப்பனுக்கு அண்ணா பதக்கங்களை முதல் அமைச்சர் வழங்கினார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருச்சியை சேர்ந்த ஷாஜ் முகமதுவுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பொதுமக்களிடையே மத நல்லுணர்வை ஏற்படுத்தியமைக்காக விருது வழங்கப்பட்டது.
இதன்பின்பு தஞ்சை தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் அருணாசல பிரதேசத்தின் 'ரிக்கம் பதா', காஷ்மீரின் 'ரோவுஃப்', தெலுங்கானாவின் 'மாதுரி' நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் சார்பில் தப்பாட்ட நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Comments