பரந்தூரில் 2-வது விமான நிலையம்

காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம்


 


சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்தபடி முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ல், ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசு தெரிவித்து வந்தது.



இந்த கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணையம் காஞ்சீபுரத்தை அடுத்துள்ள பரந்தூர் உள்ளிட்ட சில இடங்களை ஆய்வு செய்தது. அதில், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான ஒப்புதலை விமான நிலைய ஆணையம் வழங்கியது.


 


இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 4-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு உகந்த பகுதிகளாக சுங்குவார்சத்திரம் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள் முன்வைக்கப்பட்டன. இதுபற்றி அமைச்சரவையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், விமான நிலையம் அமைப்பதற்கான இடமாக பரந்தூர் முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது.


 


இந்த 2-வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் பரந்தூருடன், வலத்தூர், மேலப்பொடவூர் ஆகிய கிராமங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கி விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த விமான நிலையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட உள்ளது.


 


இந்த விமான நிலையம் அமைப்பதற்கு 4,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அளவுக்கான நிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது.


 


2-ம் விமான நிலையம் அமையும் பகுதியை, விமான நகரமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான பராமரிப்பு பகுதிகள், பல்வேறு வசதிகளுடன் கூடிய துணை நிலையங்கள், விமான போக்குவரத்து தொழிலுக்கான இடவசதிகள், உணவகங்கள், சரக்கு கையாளும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு இடம் பெறும்.


 


இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் 50 சதவீத இடங்கள் அரசு நிலமாக உள்ளன. மீதமுள்ள 50 சதவீத நிலத்தை தனியாரிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. இதற்காக தனி அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,