மகளிர் தின செய்தி பெண்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பெண்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்


கும்மியடிதமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.

காதலொருவனைக் கைப்பிடித்தேஅவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!


               பாரதியாரின் கற்பனையில் வெளிப்பட்ட பெண் விடுதலை,  அடிமை இருள் நீங்கப் பெண்விடுதலை அவசியம் எனப் பாடியுளளார். பெண்களின் விளையாட்டுகளில் சிறந்த ஒன்றான ‘கும்மியடித்தலை’ மனத்தில் நிறுத்தி, பெண்ணடிமை விலங்கொடிக்கக் கும்மியடி என்கிறார். இப் பாடல் முழுவதும்  பெண்கள் விடுதலையை மையமிட்டது, பெண்கள்  கோவில் திருவிழாவின்போது   ஒரு செய்தியை உள்ளடக்கி, கும்மி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இப் பாடலில்,  சமூகத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பதை விரிவாக எடுத்துக் கூறுகிறார். பெண்களின் மீதான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழித்துவிட வேண்டும் என்ற வேட்கை இக் கவிதையில் வெளிப்படுகிறது. இப் பாடலின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு என்ன?  இந்திய நாடு ஆங்கிலேயர்கள் பிடியில் சிக்குண்டு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பெண்களும் அடிமைகளாய் வாழ்ந்து வந்த நிலை மாறவேண்டும் என்று விரும்பிய பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை, மானுட விடுதலையின் வேர் பெண்விடுதலையே என்ற கருத்தை மையமாகக் கொண்டு, அவர்கள் விடுதலை அடைந்ததாக எண்ணிப் பாடியிருப்பது அவரின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகும். 


      அவருடைய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை  நீதிபதி  ஏ. பி. சாஉறி.  நீதிமன்ற 157 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக, புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்ற  வழக்கை விசாரிக்க உள்ளனர்.  


--செ. ஏ. துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,