உயிரென்றால் எல்லாம் உயிர் தான்
அன்பானவர்களே,
கொரோனா நோய்த் தொற்றால் மொத்த உலகமே கலங்கி கிடக்கும் இந்த நேரத்தில் எல்லோரும் சிரமத்தில் இருப்பது தெரியும்.
பாதுகாப்பான வீட்டில் வசிக்கும் நமக்கே பெரும் துயரம் என்றால் நடைபாதையில் வசிப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் பிறழ்ந்தோர், தினக்கூலித் தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் - இவர்களின் வாழ்க்கை பெரிய கேள்விக்குறிதான். அவர்களின் வாழ்வதாரம் மோசமாக இருக்கும் என்பதை நாம் யூகிக்கவே இயலாது.
நாம் மனிதநேயம் மிக்கவர்கள். நம்மால் முடிந்த உதவியையை அவர்களுக்கு செய்வோம். இப்பணி நம் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என்பதை உணர்வோம்.
அதுமட்டுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் இக்கட்டான இச்சூழலில் சாலையோரத்தில், வீடுகளைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் நாய்கள், மாடுகள், போன்ற உயிரினங்களும் உணவின்றித் தவிக்கும்.
கடை, கோவில், உணவகம் எல்லாம் மூடப்பட்டிருக்கும் இச்சூழலில் உண்ண வழியின்றி தவிப்பில் இருக்கும் இவற்றிற்கு உணவளித்து உதவுவோம்.
வேறு ஒன்றும் இல்லை. அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் குறைந்தபட்சம் ரொட்டி பாக்கெட்டுகள், ப்ரட் பாக்கெட்டுகள் ஏதேனும் எடுத்துச் சென்று பசித்திருக்கும் உயிர்களுக்கு உண்ணக் கொடுங்கள்.
நாம் உயிர் வாழ்வதே கேள்விகுறியாக இருக்கும் நேரத்தில் இப்படியான உதவிகள் தேவையா என்ற கேள்வி வேண்டாம்.
"உயிரென்றால் உயிர் தான்"
நமது அரசாங்கம் இட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்தான். ஆனாலும் கடந்து சில நேரம் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இருக்கும் பட்சத்தில் இவற்றைப் பின்பற்றலாம்.
உங்கள் ஒவ்வொருவரின் உதவியும் சிறியதாக இருப்பினும் சமூகப் பொறுப்பும், உயிரின் மதிப்பும் உணர்ந்து உதவுங்கள்.
உயிரென்றால் எல்லாம் உயிர் தான்
--கவிஞர் மனுஷி
Comments