நூலும் திரையும் - 4

                 


நூலும் திரையும் - 4


To Kill a Mocking Bird - நாவல்.


கதை நடைபெறுவதோ 1930'களில். 
அதாவது அமெரிக்காவில் தொடங்கி உலகப் பொருளாதாரத்தை மங்கச் செய்த பெருவீழ்ச்சிக் (great depression) காலம்.


நாவலாசிரியர் ஹார்ப்பர் லீ.


புத்தகம் 1960'ல் வெளிவந்தது. புலிட்ஸர் விருதை வென்றது.
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த நாவல்களுள் ஒன்று.


இந்தக் கதை அலபாமா மாகாணத்தில், மேகோம்ப் என்ற கவுண்டியில் மேகோம்ப்(fictional) நகரில் நடைபெறுகிறது.


(கருப்பின மக்களை அடிமைகளாக நடத்துவது தொடர்வதா, 
அடிமை முறையை ஒழிப்பதா என்ற விவகாரத்தில்,  ஆபிரகாம் லிங்கன் அதிபராகப் பதவியேற்ற பிறகு, 1860களில், அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களுக்கும் தென் மாகாணங்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மூண்டது.


வடக்கு, 
ஒன்றிய அரசின் பக்கம் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஆதரவாக நின்றது.


பருத்திப் பண்ணையார்களும் ஆலை முதலாளிகளும் கொழுத்த 
தென் மாகாணங்கள் அடிமை முறையை நீடிக்கவேண்டி அரசை உக்கிரமாக எதிர்த்தன.


1865'ல் ஒன்றிய அரசு வென்று போர் முடிவுக்கு வரவே, அடிமை முறை ஒழிக்கப்பட்டு, அனைத்து மாகாணங்களும் இணைந்து இயங்கலாயின.


என்றாலும், தென் பகுதியின் வெள்ளையரிடம் நிற/இன பேதம் முற்றாக மறைந்தது என்று சொல்வதற்கில்லை.
மனத்தளவில் கிலேசம் நீடிக்கவே செய்தது.
இன்றும் அதன் சாயலைக் காணமுடியும்.


அலபாமா ஒரு தென் மாகாணம்.)


இது மூன்றாண்டு கால வரையறை கொண்ட கதை.


சில கதை மாந்தர்கள்:


1. சிறுமி, ஜீன் லூயிஸ் ஃபின்ச் (ஸ்கௌட் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படுகிறாள்). துடிப்பும் ஆர்வமும் கொண்ட செல்லப்பெண்.
2 . அவளுடைய அண்ணன் Jeremy Finch (ஜெம்). கூர்த்த மதி கொண்ட pre-teen.
3. அவர்களுடைய தந்தை, Atticus Finch, ஒரு அட்வகேட்.. நடுநிலையான ஆதர்ஸ மனிதர்.
4. பக்கத்து வீட்டு ராட்லி, பெயர் ஆர்தர் ராட்லி. பிள்ளைகள் Boo Radley என்கிறார்கள். வெளியில் தலை காட்டாத, அன்புள்ளம் கொண்ட, ஒடுங்கிய வாழ்க்கையர்.
5. இந்தப்பக்கத்து வீட்டு aunty Miss Maudy. நற்குணவதி.
6. அதற்கு அடுத்த aunty வீட்டுக்கு கோடை விடுமுறைகளில் வந்து போகும் விளையாட்டுத் தோழன் Dill.
7. நாளின் பெரும்பகுதி வீட்டோடு இருந்து வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும் விவரமறிந்த கருப்பினப் பெண், கல்பூர்னியா.
8. Tom Robinson ஒரு கருப்பர் இளைஞர். உதவும் மனத்தர்.
9. இடையில் தந்தை கேட்டுக்கொண்டதால் வந்து தங்கியிருக்கும் aunty அலெக்ஸாண்டிரா, தந்தையின்(ஆட்டிக்கஸ்) சகோதரி. குடும்பப் பெருமையிலும் பாரம்பரியத்திலும் பற்றுள்ளவர்.
10. பாப் எவெல். வெள்ளையர்தான். குடிகாரர், ஊதாரி, பொறுப்பற்றவர்.
11. அவருடைய மகள் மேயெல்லா எவெல். யுவதி.


கதை, ஆறு வயதுச் சிறுமி ஸ்கௌட், அடுத்த மூன்றாண்டு நிகழ்வுகளைச் சொல்வதாக அமைந்துள்ளது.


கதை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
நாவலில் அப்படிப் பகுதி பிரிக்கவில்லை.
அதன் போக்கில் நாமே இரு பகுதிகளாகப் புரிந்துகொள்கிறோம்.


ஒன்று:
சிறுமி ஸ்கௌட்,
அண்ணன் ஜெம்,
மூன்றாவது வீட்டுக்கு சம்மரில் வரும் தோழன் டில்
இம்மூவரின் பால்ய வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. 


அவள், 
* பக்கத்தில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்து அங்குள்ள பிள்ளைகளின் வித்தியாச குணாம்சங்களை எதிர்கொள்வது,
* வீட்டிலேயே தந்தையின் கண்பார்வையில் எளிதாகப் படிக்கத் தெரிந்த நிலையில், ஆசிரியையின் வினோத அணுகுமுறையால் மலைப்பது,
* ஜெம் டில் இருவரும் மரவீடு கட்டுவது,
* தான் இதுவரை பார்க்காத அதிசயமாக ஒரு காலை எழுந்ததும் பனிப்பொழிவைப் பார்த்து உலகம் முடிவுக்கு வரவுள்ளது என்று தந்தையிடம் வியந்து விவரிப்பது,
* ஜெம் பனிமனிதன் செய்வது,
* விளையாட்டுத் துப்பாக்கி சுட்டுப் பழகுவது,
* ஒருநாள் முன்னிரவு நேரத்தில் Miss Maudy'யின் வீடு தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக வெந்து கருகியதை மிரண்டு பார்த்தது,
* வெளியில் தலைகாட்டாத பக்கத்து வீட்டு 'பூ ராட்லி'யின் இருப்பை மூவரும் துப்பறிவது,
* ராட்லியின் வீட்டுக்கு வெளியில் உள்ள ஓக் மர பொந்தில் அவ்வப்போது கிடைக்கும் பழைய கடிகாரம், சோப்பினால் ஆன பொம்மைகள், இனிப்பு(toffee) முதலிய அதிசயப்  பரிசுப் பொருள்களை  எடுத்துக் கொள்வது,
* சட்டென்று ஒருநாள் அந்த பொந்து காரை பூசி மூடப்பட்டிருந்ததைப் பார்த்து ஏமாறுவது
என்று சிறு பிராயத்து விளையாட்டுகளும்,


- கல்பூர்னியாவின் கண்டிப்பு, 
- தந்தையின்  பெருமிதமான பெருந்தன்மையான பொறுப்பான
பொறுமையான நடவடிக்கைகள்/தீர்வுகள் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகள் உள்வாங்கிப் பெருமை கொள்வது,
- "You never really understand a person until you consider things from his point of view … until you climb into his skin and walk around in it.” என்று அவரும் கருதி குழந்தைகளும் அவ்வெண்ணத்தில் ஊறி வளர்வது,
- இந்தப்பக்கத்து வீட்டு ஆண்டி மிஸ் Maudy அடிக்கடி செய்து தரும் கேக்'கை உவப்புடன் சாப்பிட்டுக்கொண்டே ஆண்டியுடன் அளவளாவி, தந்தை ஆட்டிகசின் இள வயதுச் சாதனைகளை அறிந்து கொள்வது 
என்று கலகலப்பானது இந்த முதல் பிளாட்.


(       தொடரும்   )


                                     



--- வெ.பெருமாள்சாமி



                                 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,