தும்பிக்கை ஆழ்வார்
தும்பிக்கை ஆழ்வார்
இந்து சமயக் கோட்பாடுகளில் வினாயகரை வணங்காமல் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய வினாயகரை வழிப்பட்டேயாகவேண்டும். வினாயகர் சிவபெருமானின் மகன். தீவிரமாக திருமாலை வழிபடும் வைணவர்கள் சிவன் தொடர்புடைய எதையும் கொண்டாடமாட்டார்கள். ஆனால் இந்து சமய நெறியின்படி ஒரு காரியத்தை தொடங்கும்போது வினாயகரை வழிப்படுவது கட்டாயம். இந்த நிலையில் வைணவர்கள் வினாயகரையே வைணவ சமய சம்பந்தப்பட்டவராக்கி, வினாயகர், கணபதி என்றெல்லாம் அழைக்காமல் ' தும்பிக்கை ஆழ்வார்' என்று வைணவ பெயரிட்டே வணங்கினார்கள். பெரும்பாலும் வினாயகரின் திருவுருவத்தை வழிபடாமல் சொல்லும் மந்திரங்களில் அவரை வேறு பெயர்களால் கொண்டாடுவர். சில சந்தர்ப்பங்களில் திருவுருவம் தேவையென்றால் விநாயகருக்கு திருநீறு (விபூதி) அணிவிக்காமல் வைணவ முறைப்படி திருமண் (நாமம்) இட்டு வணங்குவார்கள். சில வைணவ கோயில்களில் வினாயகரை இந்தக் கோலத்தில் மிக அரிதாக இன்றும் காணலாம்..எனினும் இந்த வழக்கம் தற்காலத்தில் வைணவர்களிடையே பெரிய அளவில் நடைமுறையில் இல்லை என்றே கொள்ளலாம்...ஆனால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்னும் சுலோகத்தைச் சொல்லிவிட்டுதான் தொடங்குவர்...இந்த சுலோகம் பிள்ளையார் மற்றும் திருமால் ஆகிய இரு தெய்வங்களுக்குமே பொதுவாகயிருப்பது கவனிக்கத்தக்கது...
மஞ்சுளா யுகேஷ்
Comments