வியர்வை
வியர்வை
கொரோனா என்ற கொடிய கண்ணுக்குத் தெரியாத தொற்று நோய் உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இக்கட்டுரை எழுதும் 04-04-2020 மாலை 6-30 மணி வரை உலகம் முழுவதும் 202 நாடுகளில் இதுவரை இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் சுமார் 11,32,000 பேர். தொற்றிலிருந்து விடுபட்டோர் சுமார் 2,34,000 பேர். இறந்தோர் மட்டும் சுமார் 60,000 பேர் என தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கினால் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி, அடங்கிக் கிடக்க வேண்டிய தவிர்க்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கவலை மக்களைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருக்கையில் கோடை வெயில் அதிகமாகிக் கொண்டே யிருக்கிறத. அக்கொடிய நோயை விரட்ட, மேலும் பரவாமல் தடுக்க, இப்பொழுது உடலால் தனித்திருப்போம், உள்ளத்தால் இணைத்திருப்போம், என்ற கொள்கையின் அடிப்படையில் வீட்டில் அடங்கியிருப்போர், வெளியே வந்து சூரியனைக் காணத் தவிக்கின்றனர். இயற்கைக் காற்றை சுவாசிக்க நாளைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியே வந்த பின், மற்றைய அனைத்துப் பிரச்னைகளையும் அவர்கள் சந்திக்க உள்ளனர். அதில் ஒன்று உடல் சார்ந்த வியர்வைப் பிரச்னை. வியர்வையைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.
வியர்வை ஏன் வருகிறது?
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்ப நிலையைச் சீர்படுத்தும் ஓர் அமைப்பாகவும் வியர்வை வெளியேறும் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவதுண்டு.
எவ்வளவு வியர்வை சுரப்பிகள்?
மனித உடலில் கண், மூக்கு, வாய், காதுகள் வழியே என 9 துவாரங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாகக் கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல இலட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியிலிருந்து செயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.
வியர்வை அளவு என்ன?
ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்ப நிலைக்கு ஏற்ப வியர்வையின் அளவு மாறுபடும். 85 டிகிரி வெப்ப நிலையிலும் 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை 1 மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியர்வையில் உப்பு
பெண்களை விட ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். தவிர, ஆண்களின் வியர்வையில் உப்புத் தன்மை அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது.
மஞ்சள் வியர்வை
கை உடலுடன் இணையும் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.
உணவும் வியர்வையும்
சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகும். அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே, உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்குத் தொடங்கும். சாப்பிடுவது வியர்வையைத் தூண்டும் என்பது இதிலிருந்து விளங்கும். -
தொடரும்
செ ஏ துரைபாண்டியன்
Comments