டார்வின் என்னும் அறிவியலாளர்

               


டார்வின் என்னும் அறிவியலாளர்


 


ஆங்கிலேய  இயற்கையியல்  அறிஞர் சார்லஸ் ராபர்ட் டார்வின்   (Charles Robert Darwin) முன்வைத்த உயிரினங்களின்படி வளர்ச்சிக் கொள்கை  ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.


            இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக  காலபாகசுத் தீவுகளுக்குச்  சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.  மனித  இனம்  குரங்கு  இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துகள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று  அறிவியல்   உலகில்   பெருமதிப்புடையவை.


            இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில்  விலங்குகள்  மற்றும்  உயிரினங்களில்  வளர்ச்சி  என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,  அதாவது  தகுதியானது உயிர் வாழும்  என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.


            டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.  


             தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி  எடின்பரோ  பல்கலைக்கழகத்தில்  மகனைச் சேர்த்தார்; ஆனால்  இயற்கையியல்  துறையிலும்,  நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு  மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.  சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழுபூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள்,  செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். 


               மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு  குழந்தைக்கு  அறுவை சிகிச்சை  நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை  இறையியல்  பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.   படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின்  தோற்றம்  பற்றிய  ஆய்விலேயே  மிகுந்திருந்தது.


 


           தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின்  கிறித்தவ  திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில்  தாவரவியல்  துறையில் பேராசிரியராக இருந்த  ஜான்  ஹென்ஸ்லோ  (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.   சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார்.


               அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது.  தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற  கப்பல்  புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், 22. வயதான டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.   இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள்  பயணத்தினைத் தொடங்கினர்.  ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.   


          ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல்,  தற்போது  காணக்  கிடைக்காத  பல உயிரினங்களின்  எலும்புகளை  ஏராளமாகச் சேகரித்தார்.  ஊர்வன,  பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.


                 இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.   “உயிரினங்களில்  ஏற்படும்  மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற  வினாவிற்கு  விடை  காணும்  ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.


                     இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார்.  தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள்  முற்றாக  அழிந்து  போயிருக்கும் என்று  முதலில்  யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island)  தீவுகளில்  புதிய வகையான பறவைகள்,  தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின்  பயனாக  “பரிணாம  வளர்ச்சிக்  கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார்.   இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.  


                     அமெரிக்க  கடலோரப் பகுதி மற்றும்  ஐரோப்பிய  தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle  என்ற  நூலை  லண்டனில்  வெளியிட்டார்.


                  திருமணம் தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood)  என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு   ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக  ஈடுபட்டார்.


 


                 1882 ஏப்ரல் 19 அன்று இறைவனடி  சேர்ந்த     அவருடைய  நினைவு நாளான இன்று  அவரைப் போல் என்றும் அறிவியலாளர்கள்   நினைவிலோ  மக்கள் மனதிலோ இடம் பெற  என்ன செய்ய வேண்டுமென்பதை  இந்த இக்கட்டான  தனிமை  நேரத்தில் சிந்தித்து செல்படுவீர்.


 


 


செ ஏ துரைபாண்டியன்


   


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,