கடந்த 6 மாதங்களில் 14 யானைகள்
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் உயிரிழந்தன என்ற செய்தி வனத்துறையின் விளக்கத்தின்மூலம் தெரிய வந்துள்ளது.
என்ன காரணத்தினால் யானைகள் இறந்திருந்தாலும் 13 யானைகள் நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்துள்ளன என்றும் கடந்த 2ந் தேதி பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதில் எத்தனை யானைகள் நோயினால் இறந்தன? எத்தனை யானைகள் மோதல் காரணமாக இறந்தன? என்ற எண்ணிக்கை தனித்தனியாக வேண்டும். தவிர, நோய்களுக்குள்ளான யானை களுக்கு நோய் எப்பொழுது கண்டறியப்பட்டது? நோய் என கண்டறிந்த நாட்களிலிருந்து .எத்தனை நாட்கள் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரமும் அவை என்ன நோயினால் இறந்தன என்ற விவரமும் எந்த, எந்த நாட்களில் இறந்தன என்ற விவரமும் வேண்டும்.
யானைகளுக்குள் என்ன காரணத்திற்காக மோதல் ஏற்பட்டது. மோதல் ஏற்பட்ட பின்னர், எத்தகைய காயங்கள் ஏற்பட்டன, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் வேண்டும். பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதானவர்கள் யார்? எப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? எதற்காக சுட்டார்கள், தந்தங்களுக் காகவா? அந்தத் தந்தங்கள் மீட்கப்பட்டனவா? அவற்றின் மதிப்பு என்ன? அவர்கள் பின்னணியில் யார், யார் உள்ளனர்? இனி அவ்வாறு நடைபெறாமலிருக்க, எத்தகைய அணுகுமுறை கையாளப்படவிருக்கிறது போன்ற விவரங்கள் தேவை?
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வகையான விலங்குகள் பல்வேறு காரணங்களால் அழிந்துள்ளன. அத்தகைய நிலை யானைகளுக்கு ஏற்படாமலிருக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இனி எடுக்க உள்ளது? என்பது தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, இந்த யானைகள் பற்றிய மொத்த விவரமும் தேதிவாரியாக தெரியப்படுத்தப்பட வேண்டும். வன விலங்கு ஆர்வலர்களில் ஒருவன் என்ற முறையில் மட்டுமல்ல, ஏதேனும் தொற்று நோயால் இறந்தனவா என்ற ஐயத்தை நீக்கவும் இந்த வினாக்களுக்கு வனத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Comments