அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு
அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு - சொலிசிட்டர் ஜெனரலுக்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு: ஜூலை 01, 2020
அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால்
புதுடெல்லி:
இந்தியாவின் தலைமை சட்ட அதிகாரி பதவி அட்டர்னி ஜெனரல் ஆகும். இந்த பதவி ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறது. தற்போது அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் இருக்கிறார். 89 வயதாகும் இவரது பதவிக்காலம் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற இருந்தது.
இந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல 2-வது நிலை உயர் சட்ட அதிகாரி பதவியான சொலிசிட்டர் ஜெனரல் பதவியும் துஷார் மேத்தாவுக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் பதவி, பிரதமர் தலைமையிலான மந்திரிசபையின் நியமனக்குழு மூலம் நியமனம் செய்யப்படுவதாகும்.
இந்த நியமனக்குழு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவிகளையும் சிலருக்கு நீட்டிப்பு செய்துள்ளது அதேபோல புதிதாக சிலருக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவி வழங்கியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தற்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரமாஜித் பானர்ஜி, அமன் லேகி, மாதவி கோரடியா திவான், கே.எம்.நடராஜ், சஞ்சய் ஜெயின் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மூத்த வக்கீல்கள் பல்பீர் சிங், சூரியபிரகாஷ் வி.ராஜு, ருபிந்தர் சிங் சூரி, என்.வெங்கடராமன், ஜெயந்த் கே.சுத், ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் மும்பை ஐகோர்ட்டுக்கு அனில் சி.சிங், பஞ்சாப் ஐகோர்ட்டுக்கு சத்யபால் ஜெயின் ஆகியோர் மீண்டும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல எஸ்டேசார்டு ஜஹாங்கிர் தஸ்தூர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கும், சேத்தன் சர்மா டெல்லி ஐகோர்ட்டுக்கும், சங்கரநாராயணன் சென்னை ஐகோர்ட்டுக்கும், கிருஷ்ணநந்தன் சிங் பாட்னா ஐகோர்ட்டுக்கும், தேவா கிரீஸ் வியாஸ் குஜராத் ஐகோர்ட்டுக்கும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments