திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண்
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண்
கேரளாவில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இவர், திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தைகள் அணியான கேரள பாலசங்கம் தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது, திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு ஆர்யாவை தேர்வு செய்துள்ளது. இதனால் கேரளாவில் 21 வயதில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் முதன்மை பள்ளிகளின் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பிற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவேன் என்று அவர் கூறினார். அரசியல் பணிகளுக்கு இடையே தனது கல்லூரி படிப்பையும் முடித்து விடுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Comments