கடந்த 30 ஆண்டுகளில் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை
உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
பிரெஸ்சல்ஸ்,
நாட்டில் நடக்கும் பல்வேறு சம்பவங்களையும் தொகுத்து செய்தியாக மக்களிடம் சென்று சேர்க்கும் பணியில் செய்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான போர், உள்நாட்டு கலவரம், கடும் மழை, வெயில் காலங்களிலும் சம்பவ பகுதிகளுக்கு நேரிடையாக சென்று உண்மைகளை சேகரித்து வரும் பணியிலும் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவை தவிர்த்து அரசியல் நிகழ்வுகள், கலை துறை சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் சுவைப்பட மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.
எனினும், உலக நாடுகள் சிலவற்றில் பத்திரிகையாளர்களின் பணி பல்வேறு ஆபத்து நிறைந்த சூழல்களுக்கு இடையே நகர்ந்து செல்கிறது. இந்த நிலையில் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, உலகத்தில் பத்திரிகை துறையினருக்கு அதிக ஆபத்துள்ள நாடுகளின் வரிசையை அறிக்கையாக பட்டியலிட்டு உள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய நாடுகளின் வரிசையில் ஈராக் முதல் இடம் வகிக்கிறது.
அந்நாட்டில், 340 பத்திரிகையாளர்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து மெக்சிகோ (178 பேர்), பிலிப்பைன்ஸ் (178 பேர்) மற்றும் பாகிஸ்தான் (138 பேர்) ஆகிய நாடுகள் உள்ளன.
நடப்பு 2020ம் ஆண்டில் குண்டு வெடிப்புகள், எல்லை கடந்த தாக்குதல் சம்பவங்கள், குறிவைத்து தாக்குதல் ஆகியவற்றில் 15 நாடுகளை சேர்ந்த 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இவற்றில் மெக்சிகோ (13 பேர்) முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து பாகிஸ்தான் (5 பேர்), பிலிப்பைன்ஸ், சோமாலியா மற்றும் சிரியா ஆகியவை (தலா 2 பேர்) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
இதேபோன்று கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்திய துணை கண்டத்தில் அமைந்த பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. ஆசிய பசிபிக் பகுதியில் 40 சதவீதம் படுகொலைகள் பாகிஸ்தானிலேயே நடந்துள்ளன என அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.
Comments