ரமணமகரிஷி (32)

  ரமணமகரிஷி (32)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  


பகுதி 32




 திருச்சுழியில்,  பகவான் ஸ்ரீ ரமணருடன் ஒரே வகுப்பில் படித்தவர் ரங்கன் என்பவர்.


 ரங்கன் அவர்களின் தந்தையும்,  பகவான் அவரது  தந்தையும் நண்பர்களாய்  இருந்தனர்.


 குடும்ப சூழ்நிலை காரணமாக, பகவான் ஸ்ரீ ரமணர் குடும்பம் மதுரை வர வேண்டிய நிலை இருந்தது.


 போலீஸ் இன்ஸ்பெக்டரான ரங்கனின் தந்தை பணி மாறுதல் காரணமாக மதுரைக்கு  குடும்பத்துடன் வந்தனர்.


 ரங்கனும், வேங்கட ராமனும் வெவ்வேறு பள்ளியில் படித்த போதிலும் இருவரின்  நட்பு தொடர்ந்தது.பள்ளி விட்ட பின்னர் ஒருவருக்கொருவர்

 காத்திருந்து வைகைக் கரையில் விளையாடி விட்டுத்  தான் வீட்டிற்கு செல்வர்.


பகவான் ஸ்ரீ ரமணர் மதுரையை விட்டு திருவண்ணாமலை வந்ததும் தொடர்பு விட்டுப் போயிற்று.


 ஆண்டுகள் பல ஆன பிறகு, திருவண்ணாமலையில் ரங்கன் அவரைப் பார்க்கப் போனார். விருபாட்சி குகையில் பகவானைக்  கண்ட பின்,  பகவான் ஏதும் பேசவில்லை.


  மீண்டும் தன் குடும்பத்துடன் போன போது  அடையாளம் தெரிகிறதா என்று  கேட்க, மெல்லிய குரலில் ரங்கன் என்று சொன்னார்  பகவான் பதில்

 சொன்னார்.


ரங்கன்,  பகவான் ஸ்ரீ ரமணரை

பார்த்து நீங்கள் மிகப் பெரிய உன்னத  நிலையை அடைந்து விட்டீர்கள் என்று சொல்ல

 இக்கரைக்கு அக்கரை பச்சை என்றார் பகவான்.


 ரங்கன் மனக் கலக்கத்துடன் இருப்பதையும், சரியான தொழில் எதுவும் இல்லாதது என்பதன் விவரத்தை ரங்கனின் தாயாரின் மூலம் அறிந்தார்.


 அன்று இரவு, ஆஸ்ரமத்தில் தூங்கிக்கொண்டிருந்த ரங்கனிடம் பகவான் வந்து உட்கார்ந்தார்.


 என்ன ரங்கா தங்களது அம்மா சொல்வதை பார்த்தால் தாங்கள் மனக் கலக்கத்துடன் உள்ளதென்று  தெரிகிறது, உனக்கு ஏதேனும் உதவி செய்யட்டுமா என்றார். என்ன சொல்வது என்று தவித்தார் ரங்கன்.


 ஒருமுறை சன்னியாசம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என  ரங்கன் சொன்னபோது, பக்தவிஜயம் என்ற புத்தகத்தைக் கொண்டுவந்து அதில் விட்டோபா  என்ற பக்தரின் வாழ்வை படிக்கச் சொன்னார் பகவான் ஸ்ரீ ரமணர்.


விட்டோபா குடும்பத்தை விட்டுப் போனது அவர் மகன் கூடவே போனது, ஒருவன் மனம் காட்டுக்குப் போனாலும் 

 வீட்டுக்கு போனாலும் கூடவே போகிறது. ஞானத்தை வீட்டில் இருந்தும்  அடையலாம். 


 தாம் வீட்டைவிட்டு வெளியேறினால்  குடும்பத்திலுள்ளவர்களின்  நிலை என்னவாகும் என்ற சிந்தனையும்  தொடரும்.நம்முடைய பிரிவால் குடும்பம் படும் இன்னல்களை யோசித்துப் பார்த்தார். விட்டோபா மனம் மாறி வீடு திரும்பினார்.


 விட்டோபாவின்  கதை ரங்கனுக்கு  ஆறுதலாய் ஆனது.


 தன்னுடைய குடும்பத்தை பற்றி யோசிக்கலானார். தன்னிலையும்,  குடும்ப சூழ்நிலையும் உணர்ந்தார்.



 சென்னையில், ஸ்ரீ ராம விலாஸ் என்ற மோட்டார் கம்பெனியில்  வேலை கிடைத்தது. பகவானிடம் சொல்லி விட்டு வேலைக்கு சேர்ந்தார்.


 ரங்கனுக்கு பகவான் ஸ்ரீ ரமணர் மறைமுகமாக வேலை வாங்க ஏற்பாடு செய்தார். ஆனால்  ரங்கனுக்கு இந்த தகவல் தெரியாது.


 பகவான் ஸ்ரீ ரமணரின் உள்ளத்தில் இருந்து வந்த நற்செயலே  தனது பால்ய சிநேகிதன் ரங்கனுக்கு ஆறுதல் தந்து அவரை கரைசேர்க்க வழிவகுத்தது.


 பகவான் ஸ்ரீ ரமணரின் பெருமைக்குரிய செயல் தானே இது.


 பகவான் ஸ்ரீ ரமணரின் மேலைநாட்டு பக்தர் ஒருவரின் சந்திப்பு  குறித்து நாளை பதிவில்.



Comments