உலக புற்றுநோய் தினம்
உலக புற்றுநோய் தினம்
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து போராடுவது என்பது குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புற்றுநோய் என்ற வார்த்தை, நம்மிடையேயும் நம் குடும்பத்தினரிடையேயும் பற்றியெரிய வைக்கும் ஒரு தீப்பந்து. ஒரு வீட்டில் தீப்பற்றிய இடத்தில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து கொண்டிருப்போம். ஆனால், அதன் தீப்பொறிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். அதுபோல், மனிதனின் உடலில் ஒரு பகுதியில் சிறு கட்டியாக தோன்றும் புற்றுநோய், அதை சரிசெய்வதற்குள், மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவி மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நோயாக கருதப்படுகிறது. உலகளவில் இந்த ஆண்டு வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14.5 கோடி பேர். அவர்களில் 7 கோடி பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த எண்ணிக்கை வரும் 2030-ம் ஆண்டில் மேலும் பல மடங்கு உயரும் என்று ஐநா சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இததனைக்கும்இன்றைய மருத்துவ உலகில் புற்றுநோய் சிகிச்சைக்கு பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிக்கு வந்துள்ள புற்றுநோய் வகை, இடம், நிலை ஆகியவற்றை பொறுத்து, அதற்கேற்ப பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தத்தில், புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய் அல்ல. அவை நம் உடலில் பாதிக்கப்பட்ட முதல் நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்து முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லோரிடம் ஏற்பட வேண்டும்.
Comments