ஞாயிறு திரை மலர்,
ஞாயிறு திரை மலர், 21/01.2021
==================================================================
எம்ஜிஆர், சிவாஜியை ஆட்டிப்படைத்த ஒரே வில்லன்.. படத்தில் வில்லன் ஆனா நிஜத்தில் ஹீரோ!
புருவத்தை ஏத்தி கைகளை பிசைந்து இவருடைய நடிப்பிற்கு பயப்படாத ஆட்களே கிடையாது என்று கூட கூறலாம். நான் யாரைசொல்கிறேன் என்பதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள் ஆம் இன்று நாம் பார்க்கப்போவது நம்பியார் தான்.
நம்பியார் கண்ணூர் மாவட்டம் கேரளா மாநிலத்தில் பிறந்து தனது அசார்த்திய திறமையால் வில்லனாக தமிழ்சினிமாவில் கொடியேற்றினார். அசோகன், வீரப்பா மற்றும் மனோகர் போன்ற வில்லன்கள் இருந்த காலத்திலேயே தனது வில்லத்தனத்தை சினிமாவில் வெளிப்படுத்தினார். இவர்களைப் போலவே தனக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அந்த அளவிற்கு இவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
நாடக குழுவில் நம்பியார் சமையல் வேலை செய்துள்ளார். அப்போது இலவசமாக உணவு மற்றும் தூங்குவதற்கு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. திரை வாழ்க்கையில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் மிகவும் கடவுள் பக்தி உடையவராக இருந்துள்ளார்.
65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு மாலை போட்டு சென்றுள்ளார். அதனால் இவரை குருசாமி கெல்லாம் குருசாமி என அழைத்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராஜ்குமார் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற இந்திய நடிகர்கள் அனைவரையும் பல கோயில்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
எம்ஜிஆருடன் இவர் பல படங்கள் நடித்துள்ளார், வில்லனாக நம்பியார் நடித்த சர்வாதிகாரி,விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இவர் வில்லனாக அசத்தியிருப்பார். திரையில் நம்பியாரை வில்லனாக பார்த்த மக்கள் நிஜத்திலும் இவர் வில்லன்தான் என நினைத்து அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால் நிஜத்தில் இவர் வில்லன் இல்லை என்பது சிறிது காலத்திற்கு பிறகு அனைவரும் தெரியவந்தது.
நன்றி: சினிமா பேட்டை
===============================================================
1981-இல் "தில்லுமுல்லு' படத்தில் அறிமுகமாகிய நீங்கள், இத்தனை ஆண்டுகளில் குறைந்த படங்களில் தான் நடித்துள்ளீர்கள். என்ன காரணம்?
உண்மைதான். எனது 40 ஆண்டு திரைப் பயணத்தில் இதுவரை 35 திரைப்படங்கள், 21சின்னதிரை தொடர்கள், ஒரு சில குறும்படங்கள்தான் நடித்திருக்கிறேன். வருவதை எல்லாம் நான் ஒப்பு கொள்வதில்லை. என் மனதிற்குப் பிடித்ததை மட்டுமே செய்கிறேன். நான் இயக்குநரின் நடிகை. இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை செய்துவிட்டு போகக் கூடியவள்.
நீங்கள் நடித்ததில் உங்கள் மனதிற்கு நெருக்கமான படங்கள் எவை?
சமீபத்தில் கெüதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குயின்(ணன்ங்ங்ய்) வெப் சீரிஸ்ஸில் நடித்தது பிடித்திருந்தது. அதுபோன்று நான் நடித்தப் படங்களில் "ஆரோகணம்', "மதயானை கூட்டம்', "வெற்றிவேல்' ஆகியப் படங்கள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை.
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வு?
"ஆரோகணம்' படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம் நடந்தது. அந்தப் படத்தில் நான் பிச்சையெடுப்பது போன்ற ஒரு காட்சி இருந்தது. இதை என்னிடம் எப்படி சொல்வது என்று தயங்கியபடியே இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், அவரது உதவியாளரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக்கேட்ட நான், நேரேஅவரிடம் சென்று, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டு, நீங்கள் காமிராவை போய் கவனியுங்கள், என்று சொல்லி விட்டு, எந்த தயக்கமுமில்லாமல், பிச்சைக்காரர்களோடு போய் அமர்ந்து விட்டேன். அன்று படப்பிடிப்பு நடந்த இடம் கபாலீஸ்வரர் கோயில் வாசலில். அங்கே என்னையும் சேர்த்து சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருந்தனர். நான் உட்கார்ந்ததும் எனக்கு அருகில் இருந்தவர், அவருக்குப் போட்டியாக வந்துவிட்டேன் என்று என்னைப் பார்த்து முறைத்த படி திட்டத் தொடங்கினார்.
அசுத்தமான அந்த இடத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் அமர்ந்திருந்தேன். என் தட்டிலும் சில காசுகள் விழுந்தன. இயக்குநர் விருப்பப்படி காட்சி எடுக்கப்பட்டவுடன், என் தட்டில் விழுந்த காசுகளை என்னைத் திட்டிய அந்த அம்மாவிடமே கொடுத்து விட்டு, வந்தேன். அதை எப்பவும் மறக்கவே முடியாது.
இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதினார். அதில் என்னைப் பற்றி குறிப்பிடும்போது "ஐ க்ண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க் யண்த்ண் ஹய்க் ஹ்ர்ன் ழ்ங்க்ண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க் ட்ங்ழ். நட்ங் ம்ஹக்ங் க்ஷங் ல்ழ்ர்ன்க்' என்று எழுதி இருந்தார். இந்த வரிகள் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது.
பேட்டி: நடிகை விஜி சந்திரசேகர்
நன்றி: தினமணி
=============================================================
திருமண நிச்சயம் முடிந்த மறுநாளே ஒரு மலையாளப் படத்துல மோகன்லால்கூட நடிச்சேன். ‘இந்த நிச்சயம் செய்யப்பட்டதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்’ன்னு பாக்யராஜ் என்கிட்ட சொல்லியிருந்தார். ஆனால், என்னால சொல்லாமல் இருக்க முடியலை. யார்கிட்டயாவது சொல்லலைன்னா தலையே வெடிச்சிரும்போல இருந்துச்சு.
அந்த மலையாளப் பட ஷூட்டிங்ல ஒரு பாடலுக்காக மாண்டேஜ் ஷாட்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாங்க. கேமிரா ரொம்ப தூரத்துல இருக்கும். நானும், மோகன்லாலும் ஏதாவது பேசிக்கிட்டே நடந்து வரணும். இதுதான் ஷாட்.
கேமிரா ஓடத் துவங்க.. நாங்க பேசிக்கிட்டே நடந்து வந்தோம். அந்த நேரத்துல நான் மோகன்லாலிடம், “ஒரு விஷயம் சொல்றேன். ஆனால் அதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது…” என்று ஆரம்பித்தேன். மோகன்லால் புரியாமலேயே “ஓகே”ன்னு சொன்னார். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நிச்சயம் முடிஞ்சிருச்சு”ன்னு சொன்னேன். மோகன்லால் இதைக் கேட்டு ஷாக்காயிட்டார்.
அவர் காட்டிய அந்த அதிர்ச்சியான முகபாவனை அந்தப் பாடல் காட்சில அப்படியே பதிவாகியிருக்கு. இப்பவும் அதைப் பார்க்கலாம். ஆக மொத்தத்துல எனக்குக் கல்யாணம்னு சொன்ன ஒரு விஷயமே ஒரு படத்துல பதிவாகியிருக்கு.. இதை இப்போ நினைச்சாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..!
அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து ‘விதி’ படத்துல நடிக்கப் போகும்போது முன்கூட்டியே தயாரிப்பாளர் பாலாஜி ஸார்கிட்ட போய் சொல்லிட்டேன். அவரும் வாழ்த்தினாரு.. அந்தப் படம்தான் நான் கடைசியா நடிச்சது. அப்புறம் ராதிகாவுக்கு இது தெரியும். ‘என்ன இது.. திடீர் கல்யாணம்’ன்னு சொல்லி அவங்களும் ஆச்சரியப்பட்டாங்க..!..” என்று சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
=======================================================
ஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் : மேடை நிர்வாகி நாகராஜனின் மலரும் நினைவுகள்
நாடகத் துறையில் ஜாம்பவானாக திகழந்தவர் நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர். இவரின் நாடகங்களில் மேடை அமைப்பு பிரமாண்டமாகவும் மந்திர, தந்திரக் காட்சிகள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும், செட் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் அவரது நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
சினிமாவில் புகழ்பெற்றாலும் நாடகத்தின் மீது தனி ஈடுபாடு உடையவர். சினிமாவில் இருந்த போதே 1954ல் நேஷனல் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு சமூக நாடகங்களை அரங்கேற்றினார். அவற்றின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமான புராண கதை நாடகங்களை நடத்தினார். இலங்கேஸ்வரன், நரகாசுரன், சூரபத்மன், துரியோதனன் உள்ளிட்ட புராண காலத்து எதிர்மறைக் கதாபாத்திரங்களிடம் உள்ள, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றிய கதைகள் மட்டுமின்றி, சாணக்கியர் சபதம், சிசுபாலன், திருநாவுக்கரசர் போன்றவர்களின் கதைகள் என 30க்கும் மேற்பட்ட கதைகளை, 8000திற்கும் மேற்பட்ட முறை நாடகமாக மேடை ஏற்றியவர் மனோகர்.
மனோகரின் நாடகக் குழுவில் 34 ஆண்டுகளாக, 5000திற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு மேடை நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர் ஆர்.நாகராஜன். அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.மனோகரின் நாடகக்குழுவில் 1974ல் சேர்ந்தேன். மேக்கப், உடை, செட்டிங், மந்திர தந்திரகாட்சி அமைப்பு போன்றவற்றுக்காக 26 பேர் பணியாற்றினர். அவர்களை நிர்வகிக்கும் பணியை செய்தேன். ஒரு நாடகம், அரங்கேற்றத்திற்கு முன்பு, ஒன்றரை மாதம், இரவு பகலாக ஒத்திகை நடக்கும். கடைசி 15 நாள், மேக்கப், உடை, இசை, லைட்டிங், செட், தந்திர காட்சி போன்றவைகளுடன் ஒத்திகை நடக்கும். அப்போது, காட்சிக்கு இடையே துரிதமாக மேடை அமைப்பு, உடை மாற்றுதல் போன்ற பயிற்சிகளை கொடுப்பார்.
மேடை அமைப்பிற்கு நேரம் அதிகமாகும் சமயங்களில், அதற்கேற்ப கதையுடன் கூடிய காமெடி காட்சி வைப்பார். அவரது நாடகங்களில், காமெடி காட்சி வருகிறது என்றால் அடுத்து மிகப்பெரிய செட் அல்லது தந்திர காட்சி வரப்போகிறது என அர்த்தம். நாடகம் போடும் இடங்களுக்கு, மூன்று லாரி நிறைய மேடை அமைப்பு பொருட்கள் எடுத்து செல்வோம். வெளிமாநிலங்களுக்கு ரயிலிலும், வெளி நாடுகளுக்கு கப்பலிலும் மேடை அமைப்பு பொருட்களை எடுத்து செல்வோம்.
மனோகர் சினிமாவில் இருந்த போது, சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆர்., -சிவாஜி இருவருமே நாடகத்திலும் ஆர்வமாக இருந்தவர்கள். மனோகரின் நாடகங்களை இருவரும் நேரில் பார்த்து பாராட்டுவதும் வழக்கமானது தான். ஒரு முறை, நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., வந்திருந்த போது, அவருக்கு முன்வரிசையில் பெரிய பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது.
பின்னால் இருக்கும் பார்வையாளர்களுக்கு, மேடை சரியாக தெரியாது. அதை எடுத்து விடுங்கள் எனக் கூறி, சாதாரண நாற்காலியில் அமர்ந்து நாடகம் பார்த்தார். மனோகரை நம்பி, 60 குடும்பங்கள் உள்ளன என எங்கள் நாடகக்குழு குறித்து, எம்.ஜி.ஆர்., கூறுவது வழக்கம். மனோகரின் நாடகங்களால் கவரப்பட்டு அவருக்கு நாடக காவலர் என்ற பட்டம் கொடுத்து பாராட்டினார். அரசியலுக்கு அப்பாற்பட்டவர் மனோகர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு கலைமாமணி விருது வழங்கினார். ஜெயலலிதா 1991ல் முதல்வரானவுடன், எம்.ஜி.ஆர்., விருது வழங்கியதுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலர் பதவியில் நியமித்தார். இவர்கள் தவிர முன்னாள் ஜனாதிபதிகள், ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், பிரதமர் இந்திரா போன்ற தேசிய தலைவர்களும் மனோகரின் நாடகங்களை பார்க்க வந்துள்ளனர். மனோகர், உடல் நலம் குன்றி, நாடகங்கள் நடத்துவதை நிறுத்திய பின், அவரிடம் இருந்த மேடை அமைப்பு பொருட்கள், உடைகளை என்னிடம் கொடுத்து, இதை வைத்து ஏதாவது தொழில் செய்து கொள் என்றார்.
அவர் 7965 முறை நாடகங்களை நடத்தி இருந்தார். 2006ல் அவரது மறைவிற்கு பின், அவரது மனைவியின் ஒப்புதலுடன், வி.என்.எஸ்., மனோகர் தியேட்டர் என்ற பெயரில், ஒரு நிறுவனத்தை தொடங்கி, அவரது நாடகங்களை, 50 முறை நடத்தினேன். மனோகரின் மேடை நாடகம், 8000 முறை அரங்கேறிய போது, விழா எடுத்தேன். தற்போது பொருளாதார நிலையால், அவரது நாடகங்களை நடத்த முடியவில்லை.
மனோகர் நாடகத்துக்கு பயன்பட்ட பொருட்களை, இப்போது, டிவி தொடர்கள், நாடகங்கள், பள்ளி, கல்லுாரி கலை விழாக்களுக்கு வாடகைக்கு வழங்கி வருகிறேன். அவருக்கு குழந்தைகள் கிடையாது பத்மநாபன் என்ற வளர்ப்பு மகன் மட்டுமே உள்ளார். நாடகத் துறை வளர்ச்சியில், 50 ஆண்டுகளுக்கு மேல், அவரின் பங்கு உள்ளது. மத்திய அரசின் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது. அது அவரது நிறைவேறாத ஆசையும் கூட. அவர் மட்டுமின்றி என்னை போன்ற கலைஞர்கள், ரசிகர்களுக்கும் அந்த ஏக்கம் உள்ளது.
மந்திர, தந்திர காட்சிகள்
நாகராஜன் கூறியதாவது: தந்திர காட்சிகள், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தின் சிறப்பு. கதாபாத்திரங்கள், வானத்தில் பறப்பது, அம்புகள் பறந்து வந்து மோதி தீ பற்றி எரிவது போன்ற காட்சிகள் அதிசயமாக இருக்கும். பாறை, வான்மண்டலங்கள், சூரியன் வெடிப்பது, யானை துதிக்கையை ஆட்டியவாறு நடந்து வந்து மாலை இடுவது, பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்றவை எந்த வித எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் பயன்படுத்தாமல் செய்தோம்.
நாடகங்களில், மேடைக்கு பின்புறம் உள்ள திரைச்சீலை, 22 அடி அகலம், 13 அடி உயரம் தான் இருக்கும். நாங்கள் இரு பக்கவாட்டிலும், 5 அடி அளவு என துாண்களுக்கு இடைவெளி விட்டு, திரைச்சீலை அமைப்போம். அது, 30 அடி அகலத்திற்கு, செட் அமைத்தது போல் பார்வையாளர்களுக்கு பிரமாண்டமாக தெரியும். டிராமாஸ்கோப் என்ற இந்த தொழில்நுட்பத்தை மனோகர் மட்டும் தான் பயன்படுத்தினார். அதே போல் மேடையில் மைக் வைத்திருப்பதே தெரியாத அளவிற்கு, ஸ்டிரியோபோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்.
மேடையின் தரையில், பார்வைக்கு தென்படாத வகையில் குறைந்த உயரத்திலும், மேடைக்கு மேலே தொங்கும் வகையிலும், மைக் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் வசனங்கள் தெளிவாக கேட்கும். நரகாசுரன் நாடகத்தில் வான்மண்டலத்தில் பறப்பது போன்ற காட்சியில், ஆர்.எஸ்.மனோகர் நடித்து கொண்டிருந்த போது மேலே இருந்து கிழே விழுந்து கழுத்தில் அடிபட்டு விபத்து ஏற்பட்டது.
அதே போல், திருப்பூரில் நாடகம் தொடங்கும் முன் காற்று, மழையால் மேடை முற்றிலும் சரிந்து விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எடுத்து செல்லும் போது, இரு முறை விபத்தில் லாரி கவிழ்ந்து, பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
வெற்றி பெற்ற இலங்கேஸ்வரன்
இலங்கேஸ்வரன் நாடகத்தில் சீதையை ராவணன் மகள் என கதையில் வைத்திருந்தார், மனோகர். முதலில் அந்த நாடகம் சரியாக போகவில்லை. ஆனால், இலங்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த கதையை காஞ்சி பெரியவரிடம் சென்று காட்டினார். அவர், இதில் தவறு ஏதும் இல்லை என கூறியதுடன் ஆசிர்வாதம் செய்தார். அதன் பின் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களிலும் அந்த நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிக முறை நடந்த நாடகம் என்ற பெயர் பெற்றது.
இவ்வாறு நாகராஜன் கூறினார்.
நன்றி: தினமலர்
Comments