காமராஜர் இந்தியாவின் பிரதமராக ஏன் வரக்கூடாது?”- அண்ணா
காமராஜர் இந்தியாவின் பிரதமராக ஏன் வரக்கூடாது?”- அண்ணா
“இலண்டனிலிருந்து வந்திருந்த டெலிவிஷன் அமைப்பாளர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “காமராஜர் இந்தியாவின் பிரதமராக வரத் தகுதி உள்ளவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று.
நான் தட்டாமல், தயங்காமல், “ஏன் வரக்கூடாது?” என்று தான் கூறினேன்.
எனக்கு ஒரு எண்ணம் தம்பி!
நாம் எவருடன் மாறுபாடான கருத்துக் கொண்டிருக்கிறோமோ, எவரை எதிர்த்து நிற்கிறோமோ, அவர் மிகச் சாமான்யமானவர், எந்தவிதமான தகுதியுமற்றவர் என்றிருந்தால், அப்படிப்பட்டவரை எதிர்ப்பதிலே பெருமையே இல்லை என்ற எண்ணம்.
புலி வேட்டை ஆடுவதில் வீரமும், களிப்பும் ஏற்படும்-ஆபத்து இருப்பினும்- நான் வேட்டை ஆடுவது மிகச் சாதாரணமான எலியை என்றால்.
அந்த வேட்டையிலே பெருமை ஏது? மதிப்பார் யார்? ஆகவே நான் காங்கிரஸ் தலைவர்களைத் தாழ்வாகப் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களைப் பற்றிய தாழ்வான எண்ணமே என் மனதில் கிடையாது.
அவர்கள் தாழ்வானவர்கள், தகுதியற்றவர்கள் என்றால், அவர்களை எதிர்த்து நாம் போராடி வருகிறோம் என்று கூறிக் கொள்வதற்கே நாம் கூச்சப்பட வேண்டும்!
ஒரு கட்சியில் உள்ளவர்களுக்கும் மற்றோர் கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கும் போட்டி, எந்த முகாமிலே உள்ளவர்கள் ‘மேலோர்’, எவர் தாழ்வானவர் என்பதல்ல, எவர் காட்டும் வழி நாட்டுக்கு நல்வழி என்பதில் தான்.
ஒரு கட்சியில் உள்ளவர்களை மற்றோர் கட்சியில் உள்ளவர்கள் மதித்திடவே கூடாது, மதித்து விடுவோமானால் பிறகு அவர்கள் முன் மண்டியிட்டு விட நேரிடும் என்று கருதுவது மிகமிகத் தவறு”
அறிஞர் சி.என்.அண்ணாதுரை ஆசிரியராக இருந்து நடத்திய ‘காஞ்சி’ (04.07.1965) தேதியிட்ட இதழில் அண்ணா எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.
நன்றி: தாய்
Comments