கண்கள் இரண்டும்...
கண்கள் இரண்டும்...
மன்னாதி' மன்னன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் பத்மினி அற்புதமாக நடனமாடி நடித்திருப்பார். இயல்பிலேயேஅவர் பரதநாட்டியக் கலைஞர் என்பதால் காதலின் பிரிவைச் சொல்லும் அவரது விழிகளும், முக பாவங்களும் பாடலுக்கு உயிர் தருவதாய் அமைந்திருக்கும்
. கதாநாயகன் எம்.ஜி.ஆரின் ஒரு புகைப்படத்தை மட்டும் பாடல் காட்சியில் இடம்பெறச் செய்து, அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பத்மினி பாடுவதாக காட்சியை அமைந்துள்ளது
இதுபே இந்த பாடலை நம்மோடு எளிதில் ஒன்றச் செய்துவிடுகிறது என சொல்லாலம்.
காதலுக்கே உரிய குணம் விரும்பிய ஒன்றைத் தொலைப்பதும், தேடுவதும், பிரிவதும், வாடுவதும்
. பிரிவைப் பேசும் காதல் கவிதைகளும், பாடல்களும் எப்போதும் நம்மை ஈர்க்கிறது
இல்லாமலே போவதைத்தான் பிரிவென்று காதல் நினைக்குமா?
இல்லை. ஒரு நாள் என்றில்லை ஒரு நிமிடம்கூட காதலர்கள் தனித் தனியே இருப்பதையும், காதலன் பொருள் தேடிப் பிரிவதையும் கூட பிரிவென்று எண்ணியே ஏங்குமாம் காதல். அந்தப் பிரிவில் உடலும் உள்ளமும் என்ன பாடெல்லாம் படுகிறது என்பதை கண்ணதாசன். அழகாகப் பாடலாக்கி சொல்லியிருக்கிறார்
காதல் உடலைத் தனித்தனியே இருக்கவிட்டாலும் , உள்ளத்தை ஒன்றாக்கிவிடுகிறது. அதனால்தான் பாதி உடலைப் பிரிந்ததுபோல் உள்ளம் தவித்துச் சாகிறது.என்பதை இப்பாடலில் காணலாம்
` பாடலின் இடையிடையே எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் இடம்பெறுவது, தன்னுடைய கதாநாயகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற கதாநாயகியின் பதற்றத்தை பத்மினி நம்மை தொற்றச் செய்துவிடுகிறார்.
தொகையறாவிலேயே காதலால் வாடும் ஒரு பெண் என்னவெல்லாம் ஆகிறாள் என்பதைச் சொல்கிறார் கண்ணதாசன்
கதறிக் கதறிச் சிவந்ததாம் நெஞ்சம். கதறல் என்கிற வார்த்தை எத்தனை பொருத்தமாக காதலின் வலியைச் சொல்கிறது நமக்கு
அழுவதற்கும் கதறி அழுவதற்கும் இடையில் எத்தனை உணர்ச்சிகள் மண்டிக்கிடக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்
காதலன் மீண்டும் வரும் வழிபார்த்து, கண்கள் சிவக்க, உதடு துடிக்க, மேனி மொத்தமும் கலங்கி ஒடுங்கி உருக்குலைந்து நின்றுகொண்டிருக்கிறாள்.
பிரிவில் நாமும் இப்படித்தானே கலங்கி, புலம்பி நின்றுகொண்டிருப்போம்.
பணம் சம்பாதிக்க அயல் நாட்டுக்கு கணவனை அனுப்பும் மனைவிகள், வேலை நிமித்தம் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகள்... என்று எல்லாமும் துயரம் பிரிவுதான். எல்லாமும் துயரம்தான். என்றாலும், காதலில் மட்டும்தான் பிரிவென்பது உயிரே போய்விடும் வலியை உண்டாக்குகிறது என்பது நிஜம்.
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
ஒரு பறவையாக மாறிவிட்டால் பறந்து சென்றாவது அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவேன். தென்றல் காற்றைத் தேராக்கி அதில் ஏறி அவனைத் தேடுவேன். அவன் இருக்கும் இடம் அறியாமல் மனம் வாடி நிற்கிறேன். சேதியைச் சொல்லும் யாரும் அவன் என்னவானான்? எப்படி இருக்கிறான் என்று சொல்லவில்லையே..
. ஒரு பெரிய கதைக்காட்சியை, நான்கு வரிகளுக்குள் அடக்கி கவியரசர் ,இந்த பாடலை தந்ததால்தான் காலம் கடந்தும்அவர் நம் உள்ளங்களைக் கொள்ளைகொண்டுள்ளார்.
நம் மனம் பழக்கத்துக்கு அடிமையான மிருகம். பழகிய எதையும் எளிதில் விடாது. எளிதில் மறக்காது.
கூடவே இருந்த ஒருவர் இல்லாமல் போனால், அவர் இல்லாமல் போனது தெரிந்தும் அவர் இருப்பது போலவே தோன்றும். இங்குதான் உட்கார்ந்திருப்பார், இங்கே நின்றுதான் நம்முடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். என்று அவரைத் தவிர, அவர் இருந்த இடமெல்லாம் அவரை நினைவூட்டி நினைவூட்டி நம் உள்ளத்தைக் கொல்லுகிறதல்லவா
மனசுக்கும் ஆழ்மனசுக்கும் உள்ள தொடர்பு இது. மிகவும் எளிய வரிகளில் இந்த உணர்வைப் பாடல் வரிகளாக்கியிருக்கிறார் கண்ணதாசன்.
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...
அவன் தந்த பரிசுப் பொருட்கள் எல்லாமும் இருக்கின்றன. அவனது நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாமல் நிழல்போலத் தொடர்ந்து வருகின்றன. காணும் இடமெல்லாம் அவனே நிறைந்திருக்கிறான். இல்லாமல் போனவர்கள்தான், அதிகம் இருந்து இம்சிப்பார்கள் உள்ளத்தை. மீண்டும் அவனைக் காணாமல் உயிர் வாழ்வதெப்படி? என்ற கேள்வியோடு நிறைவுபெறுகிறது பாடல்.
கடைசிச் சரணத்தின் கடைசி வரிகளில் `இங்கே, அங்கே, எங்கே' என்னும் வினாச் சொற்களை கச்சிதமாகப் பொருத்தியிருப்பார் கவியரசர். கணையாழி இங்கே, மணவாளன் அங்கே, காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே?
பாடல் முடிவுற்றாலும் தேடல் முடிவுறா வண்ணம், காதலின் பொருட்டு கவியரசர் கேட்கும் கேள்விகளும், எம்.எஸ்.வி.யின் டியூனும், சுசீலா அம்மாவின் குரலும் தொடர்ந்து வருகின்றன நம்மோடு ...
கதறிச் சிவந்ததே நெஞ்சம்
வழிபார்த்துச் சிவந்ததே கண்கள்
கதறிச் சிவந்ததே வதனம்
கலங்கி ஒடுங்கிக் குலைந்ததே மேனி
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
படம் : மன்னாதி மன்னன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல் : பி.சுசீலா
* * *
Comments
காலத்தால் அழியாக் காவியம். அன்றைய இலங்கை வானொலியில் தினமும் கேட்டு மகிழ்ந்த, இன்றும் கேட்கும்
பொழுதெல்லாம் உருக்குகிற பாடல். தமிழ்க்குமரனில் இரசனையில் மற்றுமோர் மைல்கல்.
வாழ்த்துகள்.