ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனை மீறுவோர் கொரோனா விதிகளின் கீழ் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிகப்படியான உடைமைகளை எடுத்து வரும் பயணிகள் உடன் வருவோரை உதவிக்காக ரயில் நிலையங்களுக்குள் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்க வேண்டும் என பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க தெற்கு ரயில்வே அனுமதித்துள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ஒன்று ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் தற்காலிக நடவடிக்கை என்றும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. .
Comments