ஞாயிறு திரை மலர் 7/03/2021
------------------------------------------------------------------------------------------------------
இன்று 7.3.2021 நம்பியார் அவர்களின் பிறந்தநாள்
தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால்தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது. நவாப் கம்பெனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935-ம் ஆண்டு 'பக்த ராம்தாசு' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.
அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக்குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தன.
1939-ல் பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கி பெரிய நடிகராகி விட்டார். 1944-ல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி.கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ்.வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்.ஜி.ஆர்.-ன் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர்.-உடன் சேர்ந்து நடித்தார். 1980-களில் வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு, இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி. தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பர சாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்து எடுத்தது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரவணா ஸ்டோர்ஸில் 5000 ரூபாய்க்கு வேலை பார்த்த நடிகை.. இப்போ சிவகார்த்திகேயன் ஜோடி!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலைகளை பார்த்துள்ளனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பட நடிகைக்கும் ஒரு இடம் உண்டு. பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் கழுகு திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சராக கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதுவும் வரவேற்பை பெற்றது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிந்துமாதவி சரவணா ஸ்டோர்ஸில் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார் என்று நாம் நம்ப முடிகிறதா. வேலை வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் பிந்து மாதவி அங்கு வேலை பார்த்ததாராம்.
ஆந்திராவில் பிறந்த இவர் விஐடி வேலூர் இன்ஸ்டிடியூட் படித்துள்ளார். அப்போது தான் சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங்காக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு டாட்டா கோல்டு டி போன்ற விளம்பரத்தில் நடி த்தார்.
சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்ததாக வசீகர பார்வை உள்ளவர் பிந்து மாதவி என பலரும் கூறியுள்ளனர். அதனால் விளம்பரங்களில் நடித்ததைப் பார்த்த தெலுங்கு இயக்குனர் சேகர் அவரை படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பின்பு பிந்து மாதவி படங்களில் நடிப்பது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லை. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேல் பிந்து மாதவியிடம் பேசாமல் இருந்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கழுகு 2. தற்போது கைவசம் 2 படங்கள் வெளிவரவுள்ளன.
நன்றி: சினிமா பேட்டை
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////
சென்னை: நடிகர் வடிவேலு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் வடிவேலு ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்!
இருந்த போதும் விஜயக்காந்த் மூலம் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வடிவேலு. விஜயக்காந்த் நடித்த பல படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஏராளமான ரசிகர்கள்
நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தார் வடிவேலு. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் வடிவேலுவின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். முன்னணி நடிகர்களை காட்டிலும் நகைச்சுவை நடிகரான வடிவேலு அதிக படங்களை கொடுத்தார்.
தரம் தாழ்ந்து விமர்சனம்
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயக்காந்த் தலைமையிலான தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, விஜயக்காந்தை தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
ரெட் கார்டு
இதனால் சினிமா பிரபலங்கள் பலருமே வடிவேலு மீது அதிருப்தி அடைந்தனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பிறகு இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
10 வருஷ லாக்டவுன்
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டவுன், நான் 10 வருடமாக லாக்டவுனில் தான் இருக்கிறேன்.
கண்ணீர்விட்ட வடிவேலு
உடம்பில் நடிக்க தெம்பிருந்தும் வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கி கிடப்பது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமான என்று பேசி கண்ணீர்விட்டார். வடிவேலு கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விஜயகாந்துடன் சந்திப்பு?
இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்த மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
பிரேமலதா ஆறுதல்
அப்போது விஜயக்காந்திடம் கண்ணீர் விட்டு அழுது வடிவேலு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தான் பேசியதெல்லாம் தவறுதான் என்று வடிவேலு கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது கேப்டன் ஒன்றும் நினைக்க மாட்டார் என பிரேமலதா அவருக்கு ஆறுதல் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
நன்றி: பிலிம் பீட் தமிழ்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கரு.பழனியப்பனின் ரசிகராகவே மாறிப் போன ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர், ‘சிவப்பதிகாரம்’ படத்தைப் பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய சம்பவத்தை சமீபத்திய ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் எனக்கு அறிமுகமான சம்பவமே சுவையானது. ‘பார்த்திபன் கனவு’ படத்திற்கான சினிமா விமர்சனத்தை எழுதிய மூத்தப் பத்திரிகையாளர் ராம்ஜி. ‘சின்னத்திரைக்கு சென்றார் கே.பி.’ ‘வெள்ளித்திரைக்கு வந்தார் இன்னொரு கே.பி.’ என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தார்.
அதைப் படித்து டென்ஷனாகிவிட்டார் கே.பாலசந்தர். “யாருய்யா அந்த கரு.பழனியப்பன்..? அவன் இன்னொரு பாலசந்தரா..?” என்று கோபத்துடன் கேட்டுவிட்டு ‘பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு எனக்கு போன் செய்தார்.
“நான் உன்னைப் பார்க்கணும்.. எங்க இருக்க..?” என்று கேட்டார். “ஸார்.. நானே வர்றேன் ஸார்.. எதுக்கு ஸார் நீங்க அலையணும்..?” என்றேன். “இல்ல.. இல்ல.. நான்தான் உன்னைப் பார்க்க வரணும்.. என்ன படம்ய்யா எடுத்திருக்க..? அசந்துட்டேன்யா…” என்று சொல்லி என்னைப் பாராட்டித் தள்ளிவிட்டார். பாராட்டுவதில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு நிகர் வேறு யாருமில்லை.
நான் இரண்டாவதாக இயக்கியிருந்த ‘சிவப்பதிகாரம்’ திரைப்படம் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் தாண்டி திரைக்கு வந்தது. ஆனால். அன்றைய நாளின் மாலைக் காட்சியிலேயே அந்தப் படத்தின் தோல்வி எனக்குத் தெரிந்துவிட்டது.
இந்தப் படத்தை கே.பி. பார்க்க விரும்பினார். அவருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுத் தருவதாகச் சொன்னேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. சத்யம் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு வந்தார்.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தார். நானும், தயாரிப்பாளரும் வெளியில் நின்றிருந்தோம். வந்தவுடன் என்னைக் கட்டிப் பிடித்து.. “என்னய்யா எடுத்திருக்க..! இத்தனை தைரியமா எடுத்திருக்கய்யா..?! அந்த அம்மா கேரக்டரை வடிவமைச்சிருக்க பாரு.. சத்தியமா யாருக்கும் வராது..” என்று பாராட்டித் தள்ளினார்.
விமர்சனங்கள் வேறு மாதிரி வருவதைப் பற்றி நான் சொன்னவுடன், “அதை விடுய்யா.. நான் வந்திருக்கேன்ல்ல.. பாலசந்தர் சொல்றான்ல.. அதையெல்லாம் விட்டுத் தள்ளு..” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.
அவ்வளவு பெரிய மனிதர்.. ஒரு சாதாரண இயக்குநரை இந்த அளவுக்கு மனமிறங்கி பாராட்டுகிறார் என்றால் உண்மையில் அவர்தான் ‘இயக்குநர் சிகரம்’. என் மனதில் எப்போதும் அவர் உயர்ந்து நிற்கிறார்..” என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
----------------------------------------------------------------------------------------
Comments