விசு
குடும்பக் கதைகள் என்றால் அது விசுதான் என்கிற டிரேட் மார்க் அடையாளத்தோடு கடைசிவரையிலும் தன்னுடைய ஸ்டைலை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் விசு.
தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு அதிகமான குடும்பக் கதைகளை வழங்கியவர் இயக்குநர் விசுதான்.
இவருடைய கதையிலும், நடிப்பிலும் வெளிவந்த ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படம்தான் இவருடைய பெயரை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்திய முதல் திரைப்படம். இதன் பின்பு வந்த ‘மணல் கயிறு’ தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளுக்கு டிரெண்ட் செட்டரானது.
அத்திரைப்படத்தின் மூலம்தான் எஸ்.வி.சேகருக்கு தமிழ்த் திரையுலகத்தில் நிரந்தரமாக ஒரு இடம் கிடைத்தது. மாப்பிள்ளையான எஸ்.வி.சேகர் போடும் 8 நிபந்தனைகள் பற்றி தமிழக மக்களிடையே ஒரு பெரிய பட்டிமன்றப் பேச்சையே உருவாக்கியது இத்திரைப்படம்.
1986 ஜீலை 18-ம் தேதி ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் விசு இயக்கத்தில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் வெற்றியைப் பெற்றது. அதோடு முதல் முறையாக மத்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தங்கத் தாமரை விருதையும் பெற்றது. அந்த வருடத்திற்கான அனைத்து திரைப்பட விருதுகளையும் இந்த ஒரு படமே வாரிச் சுருட்டியது தமிழ்ச் சினிமாவில் முக்கியமான தருணம்.
இதன் பின்பும் அசுர வேகத்தில் பல குடும்பக் கதைகளை மையமாக வைத்து படங்களை உருவாக்கி வெற்றியடைந்தார் .
இவர் கதை, எழுதி, நடித்து, இயக்கிய பல திரைப்படங்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன என்பது இவருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெருமையாகும்.
இவர் கடைசியாக இயக்கிய படம் 2001-ம் ஆண்டு வெளியான ‘சிகாமணி ரமாமணி’. இதன் பின்பும் சில படங்களில் நடித்த விசு.. பட வாய்ப்புகள் குறைந்த பொழுது தொலைக்காட்சி உலகத்தில் நுழைந்தார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments