உலக மகிழ்ச்சி நாள் இன்று
உலக மகிழ்ச்சி நாள் இன்று !!
மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டு வருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது.
ஆக மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது. மகிழ்ச்சி என்றால் என்ன? எதெல்லாம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதை உலக மகிழ்ச்சி தினமான இன்று (மார்ச் 20) தெரிந்து கொள்வோமா?
விருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துயரத்தில் இழந்த நாள் என்றும் முழுமையானதல்ல. உழைக்காத நாளும் முழுமையான நாளல்ல.
உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.
மகிழ்ச்சியை அளவிடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்காது. உணவை எடைபோட்டு சாப்பிடுவதால் உடலின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. உணவுப் பழக்கத்தையும், மற்ற உடல் செயல்களை (வேலைகள்) ஒரு பழக்கமாகவும் பின்பற்றும்போதுதான் உடல் எடையும், ஆரோக்கியமும் சீராகிறது. அதுபோலவே மகிழ்ச்சி சீராக இருக்க வேண்டுமானாலும் பழக்க வழக்கங்கள், உழைப்பு எல்லாவற்றையும் ஒரு முறையோடு செய்ய வேண்டும். தமக்கும், மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.
Comments