ரா.பி.சேதுப்பிள்ளை

பிறந்த நாள் இன்று மார்ச் 2

"செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்று கவியோகி சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. திருநெல்வேலியை அடுத்த ராசவல்லிபுரத்தில் மார்ச், 2, 1896ல், பிறவிப்பெருமான் பிள்ளை-சொர்ணம்மாளுக்கு மகனாக இவர் பிறந்தார். மணமாகி நீண்டகாலம் ஆகியும் மகப்பேறு வாய்க்காமல் இராமேஸ்வரத்தில் உள்ள இறைவனை வேண்டிப் பிறந்த குழந்தை என்பதால் பெற்றோர் 'சேது' என்று பெயரிட்டனர். திண்ணைப் பள்ளியில் கற்ற சேது பின்னர் அருணால தேசிகர் என்பவரிடம் அடிப்படை இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் இண்டர்மீடியட் படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமிழார்வமும் ஆராய்ச்சி வேகமும் கொண்டிருந்த சேதுப்பிள்ளைக்குப் பச்சையப்பன் கல்லூரிச் சூழல் ஆர்வத்தை அதிகரித்தது. படித்து முடிந்ததும் பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கினார். கூடவே சட்டக் கல்வியும் பயின்றார். சட்டப்படிப்பை முடித்தபின் திருநெல்வேலி சென்று வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். ஜானகி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த பிள்ளை, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழார்வத்தால் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.
சேதுப்பிள்ளையின் தமிழ்த் திறனையும், ஆராய்ச்சி அறிவையும் கண்டு வியந்த அண்ணாமலை அரசர், தனது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். கா. சுப்ரமண்யப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலானந்த அடிகள் போன்ற பெரும் அறிஞர்கள் அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றி வந்தனர். அதனால் ஆர்வத்துடன் அவ்வழைப்பைச் சேதுப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். அது, அவரது வாழ்க்கையின் திருப்பு முனையானது. பேச்சுத் திறனாலும், நுண்மாண் நுழைபுலத்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது நன்மதிப்பைப் பெற்றார் சேதுப்பிள்ளை. மாணவர்களுக்குச் செந்தமிழ் ஆர்வத்தை ஊட்டினார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் அங்கு திறம்படப் பணியாற்றிய பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றும் வாய்ப்பு வரவே, அதனை ஏற்றுக் குடும்பத்துடன் சென்னைக்குப் பெயர்ந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறைத் தலைவராக பேரா. வையாபுரிப் பிள்ளை பணியாற்றிய காலம் அது. சேதுப்பிள்ளையின் வரவால் மனம் மகிழ்ந்த அவர், பல முக்கியப் பொறுப்புகளை சேதுப்பிள்ளையிடம் கையளித்தார். குறிப்பாக வையாபுரிப் பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை பெரிதும் உழைத்தார். வையாபுரிப் பிள்ளையின் ஓய்வுக்குப்பின் சேதுப்பிள்ளை ஆராய்ச்சிப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு நெறியாளராக விளங்கிப் பல ஆய்வுக்கட்டுரைகள் உருவாகக் காரணமானார். சேதுப்பிள்ளையின் அயராத முயற்சியினால் 'திராவிடப் பொதுச்சொற்கள்', 'திராவிடப் பொதுப்பழமொழிகள்' என்ற இரு நூல்கள் பல்கலைக்கழகம் மூலம் வெளியாகின. பாடம் நடத்தியது மட்டுமல்லாமல், எழுத்து, பேச்சு போன்றவற்றிலும் பிள்ளை வல்லவர். ஓய்வு நேரத்தில் மாணவர்கள், பேராசிரியர்களின் அழைப்பை ஏற்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி போன்றவற்றுக்குச் சென்று மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தித் தமிழார்வம் பெருக்கினார். சிலம்பு, கம்பராமாயணம், குறள் மூன்றிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் பிள்ளை என்பதால் மாணவர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் அவரது உரையைக் கேட்க வந்தனர்.
பரவலாகத் தமிழ்ச் சமுதாயம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகமெங்கும் பயணம் செய்து இலக்கிய, சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினார் சேதுப்பிள்ளை. மக்களிடையே சமய இலக்கியம் வளர்த்தார். குறிப்பாக கம்பராமாயணம் குறித்து மூன்றாண்டுகள் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் இவர் ஆற்றிய உரை அக்கால அறிஞர்கள் பலரால் பாராட்டப்பட்ட ஒன்றாகும். சென்னையில் 'கம்பன் கழகம்' உருவாகப் பிள்ளையின் சொற்பொழிவால் விளைந்த தாக்கம் மிக முக்கியமானதாய் அமைந்தது. அதுபோல கந்தகோட்ட ஆலய மண்டபத்தில் இவர் தொடர்ந்து ஐந்தாண்டுகள் நிகழ்த்திய கந்தபுராண விரிவுரை குறிப்பிடத்தக்க ஒன்று. இது தவிர கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகளும், தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் திருக்குறள் வகுப்பைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் பிள்ளை நிகழ்த்தியிருக்கிறார்.
"சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய காப்பியங்களையும், திருக்குறள் போன்ற பேரிலக்கியத்தையும் இந்நூற்றாண்டில் மாணவரும் மற்றையோரும் எளிதிற் கற்றுக்கொள்ளும்படி எழுச்சியூட்டியவர் ரா.பி. சேதுப்பிள்ளை" என்கிறார் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன். "பேராசிரியர் சேதுப்பிள்ளை என்பால் காட்டிய நட்பும் அன்பும் தமிழ்க் கலைகளில் ஈடுபடுவதற்கு எனக்கு ஒரு தனியாற்றலை அளித்தது" என்கிறார் ஈழத்துப் பேரறிஞர் தனிநாயக அடிகள். "தமிழ்ப்பகைவர்கட்குத் திரு. சேதுப்பிள்ளை அவர்களின் பேச்சும் எழுத்தும் அறைகூவலாக அமைந்திருந்தன. பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் எக்கருத்தையும் எளிதில் அழகாக எடுத்து வைக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்களில் சேதுப் பிள்ளையும் ஒருவர்" என்கிறது அக்காலத்தின் புகழ்பெற்ற நம்நாடு இதழ்.
நன்றி: தென்றல்
May be an image of 1 person
4

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,