உலக கவிதை தினம்/ பச்சைத் தமிழனுக்கு ஒரு பாமாலை
உலக கவிதை தினம்💐
பச்சைத் தமிழனுக்கு ஒரு பாமாலை
இலக்கியம், நண்பர்கள் இவையே
உலகில் இன்னுயிர் என்றான்.
‘நடுங்கும் நா மெதுவே புரள
"குடும்பம்?’ கேட்டாள் புது மனையாள்.
மோகம் முகிழ்த்து வரும்
தேகம் தேடியே சேரும்
சுகம் கூடிவரும் நேரம்
சோகம் பாகம் போடுதே!
தாகம் தீர்ந்தபின் முழு
வேகமாய் சிந்திக்க என்றே
ஒத்திப் போட்டான் பதிலை.
தத்தை அன்று மௌனியானாள்
எச்சம் கலந்த இச்சை
இச்சைக்கோ ஓய்தல் இல்லை
மச்சு வீடு கனாவில் ஆனால்
குச்சு வீட்டில் குழந்தைகள்!
மீள முடியா பழக்கங்கள்
தாளமுடியா அழுத்தங்கள்
நிச்சயம் இன்றி சுழன்றது
சொச்சமாய் இருந்த காலமும்
விசையாய் இருந்த உடலும்
பசையற்று போன பின்னே
மீசை மேலிலிருந்த அடங்கா
ஆசையை மழித்து எறிந்தபின்
பயம் அகன்ற மனைவி
நயமுடனே எடுத்துச் சொன்னாள்
நலம் தரும் இலக்கியம்…
நல்லறமாம் நம் இல்லறம்!
முதலில் அதை நேசி
முடிந்தால் தமிழை யோசி - பிறரைக்
கடிவதால் வளராது தமிழ் - மனதில்
படிவதாலே சேரும் புகழ்!
கவிஞர் விவேகானந்தன்
Comments