கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாள் இன்று ஏப்ரல் 11

 கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாள் இன்று ஏப்ரல் 11





கலைமகள் ஆசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் முருக பக்தராகவும் இருந்து புகழ்பெற்றவர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் நகைச்சுவையாகவும் சி÷ லடையாகவும், பேசுவதில் வல்லவர் அதில் நான் ரசித்த சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
கி.வா.ஜ. பல வருடங்கள் முன்பு ஒரு முறை புதுக்கோட்டைக்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு பேச்சாளாராக கலந்து கொள்ள வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு எதிரில் அவருடைய உறவினர் இருந்ததால் முதல் நாளே அங்கு வந்து தங்கினார். குடும்பத்தினருடன் அவரை சந்தித்து பேசினோம். மறுநாள் எங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று அழைத்தோம். அவரும் சம்மதித்தார். மறுநாள் எங்கள் வீட்டிற்கு வந்தார்.
சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது ரசம் பரிமாறும்போது இது என்ன பழரசமா? என்றார். நான் உடனே இல்லை இது புது ரசம் தான் என்றேன்.
தக்காளி பழ ரசமா? என்று கேட்டேன் என்றார்.
தயிர் சாதம் சாப்பிடும்போது அதிகபிரசங்கி இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார்.
நாங்கள் புரியாமல் விழித்தோம். தெரியாதா? அதிகப்ரசங்கி என்றால் காய்ந்த உப்பு நார்த்தங்காய் ஊறுகாய் தான். அதனுடைய குணம் என்ன தெரியுமா? விருந்து சாப்பிட்டு கடைசியில் அதை சாப்பிட்டால் முதலில் சாப்பிட்ட எல்லாவற்றையும் சுலபமாக ஜீரணிக்க செய்து விடும். ஆனால் தான் மட்டும் நெஞ்சிலேயே நிற்கும். அதானல் தான் அதற்கு அப்படி ஒரு பெயர் என்றார்.
அன்று மாலை தான் அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பகலில் நாங்கள் யாவரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பி ஒரு போட்டே கிராபரை அழைத்து வந்தோம்.
எங்கள் வீடு பழங்கால வீடு. நடுவில் முற்றம். சுற்றி கூடங்கள். நாங்கள் ஒரு பத்து பேர் கூடத்தில் ஒரு பக்கம் நின்றோம். போட்டே எடுப்பவர் முற்றத்தின் ஓரம் நின்று கேமிராவில் எங்களை பார்த்து கொண்டு கொஞ்சம் பின்னால் போங்கள். நேரே கேமிராவை பாருங்கள் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கி.வா.ஜ. அவர்கள் போட்டே எடுப்பவரை பார்த்து தம்பி கொஞ்சம் கால் அடி நீங்க பின்னுக்கு போனால் எங்களை விட நீங்கள் நன்றாக விழுவீர்கள். முற்றத்து பள்ளத்தில் என்றார். எல்லோரும் குபீரென்று சிரித்து விட்டோம்.
மாலையில் அவர் நிகழ்ச்சிக்கு போக எங்கள் வீட்டு கார் ரெடியாக இருந்தது. அவர் காரில் ஏறிக்கொண்ட பிறகு என் கணவர், மைத்துனர் எல்லோரிடமும் உங்களிடம் நெருங்கி பழக எனக்கு ஆசையாக உள்ளது. வாங்க காரில் ஏறுங்கள் என்றார். காரில் இடமில்லை என்று தயங்கியவர்கள் காரில் ஏறிக்கொண்டார்கள். இட நெருக்கடி என்பதை தான் அப்படிக் கூறினார்.
மாலை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நாங்களும் கோயிலுக்கு சென்றோம். அது புவனேஸ்வரி அம்பாளின் ஒரு பெரிய புத்தகம். அப்போது பேச ஆரம்பித்த கி.வா.ஜ. அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர் ராமசாமி நான் வெறும் ஆசாமி என்றார்.
கூட்டத்தில் சிரிப்பு அலை அடங்க நீண்ட நேரம் ஆகியது எல்லாம் முடிந்து பிரியாவிடை பெற்று புறப்பட்டார் அவர்.
ஊர் போய் சேர்ந்தவுடன் ஒரு லெட்டர் அன்பாக எழுதினார். அம்மணி உண்டி கொடுத்து வண்டியும் கொடுத்து சுபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன்.
இப்படி பட்ட ஓர்
அருமையான
மனிதரை இன்றும் என் 80 வது வயதில் மறக்காமல் வணங்குகிறேன.
-ராதா ராமமூர்த்தி, அசோக்நகர்.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,