மார்டின் லூதர் கிங்;

 மார்டின் லூதர் கிங்; இணையற்ற போராளி கொல்லப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு



மார்டின் லூதர் கிங் இணையற்ற போராளி. வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்டின் லூதர் கிங் வந்தார்.


ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் என்கிற எண்ணம், பலூன் கடைக்காரரின் நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை

எழுப்ப பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.


அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.


எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர்.


அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும்?

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,