கான் சாகிப்

 




1763 செம்டம்பரில் தொடர் மழையின் ஊடே மதுரையை கும்பினி படைகள் 22 நாள்கள் தாக்கியது, கான் சாகிப்பின் தாக்குதலில் கும்பினி படைகள் பெரும் சேதத்தைச் சந்தித்து நிலைகுலைந்து போனது. மீண்டும் சென்னை, மும்பையிலிருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நவீன ஆயுதங்களுடன் மேஜர் பிரஸ்டன் தலைமையில் மீண்டும் தாக்குதல் தொடங்கியது.

கான் சாகிப் உடன் இருந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர், அவருடன் இருந்த பிரெஞ்சு தளபதி கமேண்டர் மெர்ச்சன் காட்டிக்கொடுக்க முன்வந்தார். கும்பினியாரிடம் விலைபோனவர்கள் தொழுகையில் இருந்த கான் சாகிப்பைப் பின்னிருந்து தாக்கிக் கட்டிப்போட்டனர். கான் சாகிப் கும்பினி படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். 1763 அக்டோபர் 15 அன்று கான் சாகிப் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே ஒரு மாமரத்தில் தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ, மூன்றாவது தூக்குக்கயிறு கான் சாகிப்பின் உயிரைப் பறித்தது.
நெல்லூர் சுபேதார், ஈசப், யூசுப், யூசுப்கான், மகம்மது யூசுப், கான்சாகிப், கும்மந்தான் என்று மதுரையின் வரலாற்றில் பல பெயர்கள் கொண்ட ஒரு முக்கிய பாத்திரம் முடிவுக்கு வந்தது. ஒருவருக்கு இத்தனை பெயர்கள் எப்படி வந்தன? கான் சாகிப் தனது வீட்டை விட்டு ஓடி பாண்டிச்சேரி சென்றது முதலே பல வேலைகள், பொறுப்புகளில் இருந்துள்ளார். வேலை செய்த இடங்களிலெல்லாம் அவர் காட்டிய ஈடுபாடு அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் அவரை ஒரு புதிய பெயர் சொல்லி அழைத்தனர்.
அதிகாரிகளைப் போலவே மதுரை மக்களின் மனங்களிலும் தனக்கான ஒரு தனித்துவமான இடத்தை கான் சாகிப் பெற்றிருந்தார் என்பது அவரைப் பற்றிய பல பனுவல்கள் நமக்கு உணர்த்துகிறது. நா.வானமாமலை தொகுத்து வெளியிட்ட கான் சாகிபு சண்டை, ந.சஞ்சீவி எழுதிய கும்மந்தான் கான் சாகிபு தவிர்த்து கான் சாகிப் பற்றிக் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாகவும் உள்ளன. இந்தக் கதைப் பாடல்களின் பாத்திரங்கள் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து கான்சாகிபு நடத்திய போர்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றன. கான் சாகிப்பின் வரலாற்றில் முக்கியமான பகுதி திருநெல்வேலிப் பாளையக் காரர்களோடு நடத்திய போர்களாகும். இதைப் பற்றிக் கதைப் பாடல் எதுவும் கூறவில்லை. ஆனால் மதுரையில் கான்சாகிபு சுபேதாராகப் பதவியேற்ற காலம் முதல்தான் கதை தொடங்குகிறது. கான்சாகிபுவின் வாழ்க்கையில் கடைசி ஏழு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள் இக்கதைப் பாடல்களின் பொருளாக உள்ளன.
கான் சாகிப்பிற்கு மதுரை மக்கள் மத்தியில் இருந்த புகழைப் பார்த்து ஆற்காடு நவாப் அஞ்சியது போலவே அதனைக் கண்கூடாகப் பார்த்த கும்பினி அதிகாரிகள் அதிர்ந்தனர். கான் சாகிப்பின் உடல் புதைக்கப்படும் இடம் பெரும் நினைவுச் சின்னமாக மாறிவிடும் என்பதால் அவரது தலையைத் திருச்சிக்கும், கைகளைப் பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். கான் சாகிப்பின் உடலை மட்டும் தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். கான் சாகிப் தூக்கிலிடப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின் 1808-ல் அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிபுரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பவரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,