#கவியரசு_கண்ணதாசன்_பிறந்த_தினம்
#கவியரசு_கண்ணதாசன்_பிறந்த_தினம்
தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கும் கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.
செம்மொழித் தமிழின் இனிமையை மெருகூட்டி, நம் காலத்தில், நம்மோடு வாழ்ந்து, நம்மைக் கவிதைகளால், பாடல்களால் இன்புறச் செய்த அந்தக் கவிஞனை, வானம்பாடியைப் புகழ என்னிடம் இருக்கும் புகழாரத்திற்கு, இங்கே முகநூலில் இடம் மிகக் குறைவுதான்.
காதலா - அதில் இனிமை, மகிழ்ச்சி, உற்சாகம் இவற்றோடு அவசியமென்றால் சுகமான சோகத்திற்கும் கூட பஞ்சம் இருக்காது. வாழ்க்கைத் தத்துவம், வீரம், பக்தி, நட்பு, பாசம் என்று அவர் தொடாத துறையுமில்லை. தொட்டதால் உயர்ந்த கருத்துக்களை, தகவல்களை சொல்லாமல் விட்டதுமில்லை.
எல்லாமே இருந்தாலும், "நான் ஒன்றும் தத்துவ மேதையல்ல, என் பாடல்களிலே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் தேடிப்பார்த்தால், பகவத் கீதையிலோ, பைபிளிலோ, குர் ஆனிலோ, இலக்கிய நூல்களிலோ கண்டுபிடித்துவிடலாம். நம் முன்னோர்கள் சொன்னதைத்தான் நான் என் வழியிலே எழுதுகிறேன்" என்று சர்வ அடக்கத்தோடு சொன்ன கவிமேதை அவர்.
அவர் எழுதிய பல நூல்கள் தமிழுலகின் அரிய சொத்துக்கள் என்றால் மிகையில்லை. மிகச் சிறப்பாக "அர்த்தமுள்ள இந்துமதம்", "கடைசிப் பக்கம்", "இயேசு காவியம்" முதலானவை என்னைப் போலவே, கோடிக்கணக்கோரை கவர்ந்தவை.
தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும்வரை அவர் பெயர் நிலைத்திருக்கும். அவரை மறந்தால்தானே நினைப்பதற்கு? எங்கோ வானிலே பறந்துகொண்டிருக்கும் அந்த ஆத்மா மீண்டும் தமிழ் மண்ணிலே பிறந்து, கவி மழை பொழிய வேண்டும். அதனால் தமிழன்னை மேலும் சிறப்புற வேண்டும் என்று வணங்கி, அவருக்கு பாத வணக்கம் செய்கிறேன்.
கவியரசுவே, என் உடல் மண்ணில் விழும் நாள் என் மனதில் இருந்து நீ அகலும் நாள். மீண்டும் பிறந்தாலும் உன் கவிதைகளுக்கு நான் அடிமையாகவே பிறப்பேன்.
வாழ்க உன் நாமம்!!!
Comments