ஃபிடலுக்கு எழுதிய கடிதம்

 ஃபிடலுக்கு எழுதிய கடிதம்





ஃபிடல்,
இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.
நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? ஒரு நாள் அவர்கள் (புரட்சிப் படையினர்) வந்து, ‘இறந்து போனால் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்?’ என்று கேட்டார்கள். பிறகு எல்லாம் புரிந்து விட்டது. ஒரு புரட்சியின் முடிவு வெற்றி அல்லது வீரமரணம் என்பதை புரிந்து கொண்டேன்.
இன்று நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால் கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. கியூப மண்ணிலே நிகழ்ந்த கியூபப் புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றி விட்டேன் என்று நினைக்கிறேன்.
ஆகையால் நான் உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய கியூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.
கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பில் இருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி எனக்கு கியூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால் வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத் தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மேல் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராகப் பரிணமித்த உங்களது குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்து கொள்ளத் தவறியது.
கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். அந்த சமயத்தில், நீங்கள் இயங்கியதைப் போல் அவ்வளவு பிரமாதமாக ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களைத் தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டுப் பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.
எங்கோ கண் காணாத இடத்தில் என் முடிவு நெருங்குமானால், அந்த கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
எனக்கு கற்றுக் கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டுக் கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும் அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும் ஒரு கியூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு விளங்குவேன்.
எனது மனைவி மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசு இருக்கிறது.
இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர, வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.
என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.
– சே –
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,