சர்ரென ஆட்டோவில் ஏறிய.. அமைச்சர்கள் அன்பில், சேகர், எம்பி தயாநிதி..
சரிப்பட்டு வராது.. சர்ரென ஆட்டோவில் ஏறிய.. அமைச்சர்கள் அன்பில், சேகர், எம்பி தயாநிதி.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் தமிழ்நாடு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ஆட்டோவில் பயணம் செய்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார்கள். முக்கியமாக சென்னையில் திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தினமும் ஒரு ஏரியா என்று கொரோனா தடுப்பு பணி, தூய்மை பணிகளில் ஈடுபடுவதால் அவர்களை எளிதாக சாலைகளில் நடமாடுவதை பார்க்கக் முடிகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகலில், சென்னையில் தமிழ்நாடு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ஆட்டோவில் பயணம் செய்தது பெரிய அளவில் வைரலானது. சென்னை தியாகராய நகர் சாலையில் இவர்கள் மூவரும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். இதை பார்த்த மக்கள் பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.
என்ன அமைச்சர்கள் இப்படி ஆட்டோவில் வருகிறார்களே என்று குழம்பிப் போனார்கள். அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோரும் பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி, ஆட்டோ ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே, சிரித்தபடி பயணம் செய்தனர். ஆட்டோ ஓட்டுனரும் அவர்களிடம் சகஜமாக பேசியபடி சென்றார்.
மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த இவர்கள் இப்படி ஆட்டோவில் சென்றனர். இவர்கள் தங்களின் தனி தனி காரில்தான் சென்றுள்ளனர். அப்போது இடநெருக்கடி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கார் நகராமல் ஒரே இடத்தில் ஊர்ந்து சென்றுள்ளது.
ஆட்டோவில் சென்றால் உள்ளே புகுந்து வேகமாக சென்றுவிடலாம் என்பதால் உடனே அருகில் இருந்த ஆட்டோவை பிடித்து எல்லோரும் ஒன்றாக ஆட்டோவில் பயணித்து உள்ளனர். ஆட்டோவில் சென்ற அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி மாறன் மூன்று பேரும் மறைந்த ஜெ. அன்பழகன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இவர்கள் மூவரும் ஆட்டோவில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்
Comments