கவியரசருக்கு ஒரு கவிமாலை

 கவியரசுக்கு இன்று பிறந்தநாள்


 கவியரசருக்கு ஒரு கவிமாலை




 எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்குப் பிறந்து


 எட்டாது  உயரம் சென்றார் கவியால் மலர்ந்து


 அர்த்தமுள்ள இந்துமதமென கட்டுரையைத் தந்து


 அழகுடனே அளித்தார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து



 இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்து


 எதுகை மோனையுடன் பாடல்களைத் தெரிந்து


 இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து


 இவ்வுலகம் போற்றும் இவர் ஆற்றலை வியந்து 


 ஞானத்தால் அமைந்த சிந்தனை வெகு சிறப்பு


 ஞாலத்தில் நிலைத்து நிற்கும் படைப்பு


 பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வியப்பு


 பாடல்களில் தெரியும் தத்துவ அமைப்பு



 கவியரசரிடம் போற்றப்பட வேண்டிய கற்பனை வளம்


 கடவுளே கேட்கும் கிருஷ்ணகானம் தனியிடம்


 உயிரும் மெய்யுடன் உயிர்மெய்யெழுத்து


 உயிரோடு என்றும் இருக்கும் இவர் உயர் கருத்து.



  மெல்லிசை மன்னரின் பிறந்த நாளும் இன்று தான்.


 சரிகமபதநி ஸ்வரங்கள் தந்ததோ இசை மகத்துவம் 


 சங்கீதமே வாழ்வென வாழ்ந்தது அருந்தவம்


 தமிழினை  இசைய வைத்தீர் மெல்லிசை மன்னராய் 


 தந்த பாடல்கள் எல்லாம் தேனிசை யாய்



 அறிவாற்றல் ஆர்மோனியத்தில் விரல் வழி அழுத்தமாய்


 அருவியென பாடல்கள் பிறந்தது அனைத்தும் அற்புதமாய்  


 காலத்தால் இசைத் தமிழை  படைத்ததெல்லாம் வேணுகானமாய்


 கலைவாணி அருள் கலந்ததே இசையின் சங்கமமாய்


 உள்ளத்தை வருடும் மெட்டுக்கள் அமைத்தாய்


 உமைப் பெற்றவர் நிச்சயம் அருள் பெற்ற தாய்


 கலையோடு நற்றமிழையும் சேர்த்தே வளர்த்தாய்


 சிலையென மனிதரையாக்கி சிந்தையில் நிறைந்தாய் 


 மக்கள் திலகம் நடிகர் திலகம் பாடல் காலமே பொற்காலம்


 கண்ணதாசன் வாலி வரிகள்  அழகு கோலம்


 இசையொன்று இருக்கும் வரை செவிகள்  கேட்கும்


 எம்.எஸ்.வி. பாடல்கள் எத்தலைமுறையும் ஈர்க்கும்.



 முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,