மோடி vs ஆதித்யநாத்.. உபியில் களமிறக்கப்பட்ட குஜராத் "கை" அரவிந்த் குமார்

 மோடி vs ஆதித்யநாத்.. உபியில் களமிறக்கப்பட்ட குஜராத் "கை" அரவிந்த் குமார்




உத்தர பிரதேசத்தில் களமிறக்கப்பட்டு இருக்கும் முன்னாள் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமாருக்கு பாஜக தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக திரும்பி உள்ளது.





அடுத்த பிரதமர் இவர்தான்.. மோடிக்கு ஒரே மாற்று கொண்ட தலைவர் இவர்தான் என்றெல்லாம் பாஜகவினர் மூலம் பாராட்டப்பட்ட நபர்தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடியும் கூட ஆதித்யநாத் வளர்ச்சிக்கும், அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கும் இதுவரை உறுதுணையாகவே இருந்து வந்தார்



ஆனால்.. ஆனால் தற்போது மொத்த பாஜகவும், உத்தர பிரதேச ஆளுநர் அனந்தி பெண் பாட்டீல் தொடங்கி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரை பலரும் ஆதித்யநாத் மீது கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.. அப்படி என்ன நடந்தது?


உத்தர பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளவில்லை.. கங்கையில் கூட பிணங்களை மிதக்கவிட்டது.. 4 வருட மோசமான ஆட்சி என்று ஆதித்யநாத் மீது கடுமையான புகார்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது ஒரு மாநில பிரச்சனை என்பதை தாண்டி மத்திய அரசின் மீது விழுந்த கறையாகவும், சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிரச்சனையாகவும் மாறியது. இது பிரதமர் மோடியின் தோல்வியாக பார்க்கப்படுகிறது

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத்தின் மோசமான ஆட்சி கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஏற்கனவே ராஜ்யசாபாவில் பெரும்பான்மையை இழந்து வரும் பாஜக உத்தர பிரதேச தேர்தலிலும் தோல்வி அடைந்தால் மொத்தமாக பெரும்பான்மை இழக்கும். உ. பியை இழந்தால் அடுத்த லோக்சபா தேர்தலிலும் அது பாஜகவிற்கு எதிராக திரும்பும்.



இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி உத்தர பிரதேச நிலவரம் குறித்து ஆலோசனை செய்தனர். அப்போதே யோகியை கொஞ்சம் கட்டுப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறார் என்று யோகி குறித்து புகார் வைக்கப்பட்டு உள்ளது. மீட்டிங்கிற்கு பின் உ.பி ஆளுநர் அனந்திபென் பாட்டீல் மூலம் ஆதித்யநாத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை என்று மேலிடத்திற்கு புகார் சென்றுள்ளது.



உத்தர பிரதேச பாஜகவினர் சொல்லும் அறிவுரைகளை ஆதித்யநாத் கேட்பது இல்லை. ஆளுநர் சொல்வதை கேட்பது இல்லை. மேலிடத்தில் இருந்து வரும் அறிவுரைகளை கூட கேட்பது இல்லை. சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார். ஆதித்யநாத் தனி ஆவர்த்தனம் நடத்துவதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆதித்யநாத் மீது மோடி, அமித் ஷா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறுகிறார்கள்.. தன்னுடைய இமேஜ் சரிய ஆதித்யநாத்தான் காரணம் என்று மோடி பர்சனலாக கருதுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் மோடி மூலம் களமிறக்கப்பட்ட முன்னாள் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் சர்மா கவனம் பெற்றுள்ளார். மோடிக்காக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தர பிரதேசம் போனவர்தான் அரவிந்த் குமார். அங்கு உடனே மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போதே அரவிந்த் மூலம் ஆதித்யநாத்திற்கு செக் வைக்கப்படுகிறதோ என்று கேள்வி எழுந்தது


இந்த நிலையில்தான் தற்போது அரவிந்த் குமாரை துணை முதல்வராக நியமிக்க பாஜக தலைமை யோகிக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே தினேஷ் சர்மா, கேஷவ் பிரசாத் என்ற இரண்டு துணை முதல்வர் உள்ள நிலையில் அரவிந்த் குமாரை உள்ளே கொண்டு வர மோடி, அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. யோகிக்கு கால் கட்டு போடும் முடிவில் பாஜக இவரை களமிறக்க போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.


உத்தர பிரதேச பாஜக தலைவர்கள் சிலர் இதை மறுத்து வந்தாலும்,அரவிந்த் குமார் முக்கியத்துவம் பெறுவது உண்மைதான் என்கிறார்கள். இதனால்தான் அரவிந்த் குமாரை இதுவரை யோகி சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை. அதேபோல் டெல்லியில் நடந்த உ.பி குறித்த ஆலோசனைக்கும் யோகி ஆதித்யநாத் செல்லவில்லை என்றும் கூறுகிறார்கள். அரவிந்த் குமார் - யோகி ஆதித்யநாத் இடையே வெளிப்படையாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது

அரவிந்த் குமார் மோடிக்கு நெருக்கமானவர். இதனால் அவர் முதல்வர் வேட்பாளராக கூட நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் யோகியோ பாஜகவின் பாரம்பரிய உறுப்பினர் இல்லை. ஏன் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கூட இல்லை. யோகி இந்து யுவா வாஹினி அமைப்பை சேர்ந்தவர். ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். இப்படி இருக்கும் போது யோகியை கழட்டிவிட பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

2022ல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும். அப்படி வெல்ல வேண்டும் என்றால் ஆதித்யநாத்தை முன்னிறுத்த கூடாது என்று பாஜக நினைக்கிறது. உத்தர பிரதேசத்தில் வென்றால் மட்டுமே அடுத்த லோக்சபா தேர்தலிலும் வெல்ல முடியும். இதனால் இப்போதே அவரை கட்டுப்படுத்தி அரவிந்த் குமாரை முன்னிறுத்த மோடி அண்ட் கோ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

நன்றி https://tamil.oneindia.com/news

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,