கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..!

 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..!


‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.
அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.
அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.
நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.
இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால் எப்படியிருக்கும்…?” என்றார் பாரதிராஜா. அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.
அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.
படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.
அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின் பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத் தோன்றவில்லை.
அதை நான் இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.
“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்றேன் நான்.
ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.
மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின் வாசலுக்கு சென்ற நாங்கள் மூவரும் வகுப்புகள் விட்டு வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் யாரும் தேறவில்லை.
பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.
போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றோம்.
அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக நாங்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.
கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று என்னிடம் கேட்டார்.
முத்துராமன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் முரளியை ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆகவே, “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னேன். பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். நான் முரளியை அழைத்துப் பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான் என்று எனக்குப் புரிந்துவிட்டது.
அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன் வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.
இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே எங்களை வரச் சொன்னார். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றவுடன் வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று அவரிடம் பாரதிராஜா சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.
படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார் முத்துராமன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன் நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
கதாநாயகனாக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு ஏற்பாடுகளுக்காக பாரதிராஜா புறப்பட்டுவிட அதற்கு அடுத்த நாள் காலையில் நானும், முரளியும் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.
நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும் கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.
- சித்ரா லட்சுமணன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,