என் கதை சொல்லலில் எதிர் விமர்சனங்களே இல்லையா?

 என் கதை சொல்லலில் எதிர் விமர்சனங்களே இல்லையா?




அப்படி உலகில் ஏதாவது இருக்க முடியுமா என்ன? சில வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் உச்சரிக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கிறேன். இப்படி நிறைய.
இவைகளை நான் என்னைச் செதுக்கிக் கொள்ளும் உளியின் ஓசைகளாகவே எடுத்துக்கொள்கிறேன்.
கதை சொல்லும் போதே நான் என்னை இழக்கிறேன். நான் என்பது கரைந்து என்னிலிருந்து வழிந்துவிடுகிறது. ஜி. நாகராஜனின் கதையைப் பற்றிப் பேசும் போது, நான் தங்கம் என்ற வேசியாகவே என்னை உணருகிறேன் ஒரு ஆணின் படர்தல் என் மீது நிகழ்கிறது. நான் எப்படி பவாவாக இருக்க முடியும்?
அம்பை சொல்வது போல இலக்கியத்தில் ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், பிராமண எழுத்தாளர்கள் சைவப்பிள்ளை எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள் என ஒரு சௌகரியத்திற்கு வாசகன் வகைப்படுத்திக் கொள்ளலாமே யொழிய, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
ஒரு பெண்ணின் பிரசவத்தை, பிரசவதற்குப் பின் அவள் வயிற்றில் விழும் வெண்கோடுகளை ஒரு பெண் எழுத்தாளரை விட சுந்தர ராமசாமி யும், சு. வேணுகோபாலும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள்.
ஒரு தலித்தின் வாழ்க்கைப் பாட்டை ஒரு தலித் எழுத்தாளனை விட, தலித் அல்லாத எழுத்தாளன் இன்னும் நெருக்கமாக எழுதிவிடுகிறான்.
ஆக ஒரு கதை சொல்லியை, அவன் எதைப் பேசவேண்டும் என நீங்கள் நிர்பந்தித்து, அவனைக் கேளிக்கையாளனாக மாற்றி விடாதீர்கள்.
அவன் ஒரு காட்டாற்றைப் போல மலைகளிலும், குன்றுகளிலும், வனத்திலும், மதிலிலும் நிறைந்து கடலை நோக்கிப் போகவேண்டியவன்.
நீங்கள் அரசாங்கத்தைப் போல அணைகட்டாதிருங்கள். எனக்கென்று பெருங்கனவுகள் உண்டு. அதன் எல்லைகள் பூமியின் விளிம்புக்கும் அப்பால்.
என் பெருங்கதையாடலில் டால்ஸ்டாயும், தாஸ்தாயொவ்வேஸ்கியும், ஓரான் பாமுக்கும், கார்சியா காப்ரேல் மார்க்குவிசும் தமிழ் வாசகர் களுக்குச் சொல்லப்படவேண்டும்.
இவைகளைக் கேட்கும் காதுகள், அவர்களை நோக்கிப் பயணித்து அவர்களை அடைய வேண்டும். என் மானுட ஜீவிதம் இதற்கு எனக்கு அனுமதியளித்தால் நான் இயற்கைக்கு மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இத்தருணத்தில் என் உருவத்தையும், குரலையும் பதிவு செய்து உலகமெல்லாம் கொண்டுபோன மகன் வம்சியை, சுருதி டி.வி. கபிலன், சுரேஷ், இன்னும் என்னுடனிருந்து என்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு கேமராவுக்குள் கொண்டுவந்த பல நண்பர்களை மானசீகமாக கட்டியணைக்கிறேன்.
என் இந்த எளிய பயணம் இவர்களின்றி சாத்தியமில்லை. இனியும் சாத்தியப்படப் போவதுமில்லை.
பவா செல்லதுரை பதில்
நன்றி: நக்கீரன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,