பாலுமகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி

 பாலுமகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி





சிறந்த ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த இயக்கத்திற்காகவும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள பாலு மகேந்திரா, “எனது நாற்பதாண்டு கால சினிமா பயணத்தில் நான் நினைத்த மாதிரி மூன்று படங்களைத்தான் என்னால் உருவாக்க முடிந்தது…” என்று சொல்லியிருக்கிறார்.
“விருதுகளைப் பொருத்தவரைக்கும் கலைஞர்களுக்கு அவைகள் ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். அதனால்தான் அந்த விருதுகள் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை. என்னுடைய ‘ஜுலி கணபதி’ திரைப்படம் விருதுக்கு அனுப்பப்படவே இல்லை. அது குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை” என்று கூறி இருக்கிறார் அவர்.
ஆரம்ப காலம் முதலே தனது கதைகளுக்கான நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரே தவிர நடிகர்களுக்காக பாலு மகேந்திரா கதை எழுதியதே இல்லை.
அதே போன்று தமிழ்ப் படங்களில் இடம் பெறும் பாடல் காட்சிகளிலும் எப்போதும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. “எந்த ஊரிலாவது நமது படங்களில் வருவதுபோல காதலர்கள் ஒரே மாதிரி ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்களா…? அவர்கள் போதாதென்று ஒரே மாதிரி உடையணிந்த முப்பது, நாற்பது பெண்கள் வேறு கூடவே ஆடுவார்கள்..” என்று தமிழ்ப் படப் பாடல் காட்சிகள் குறித்து விமர்சனம் செய்துள்ள பாலு மகேந்திரா கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆரம்பித்து சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளைத் தொடரும் அபத்தத்தில் தனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிறார்.
பாலுமகேந்திராவுக்கு மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருமே பிடித்தமான நடிகர்கள். மம்முட்டியுடன் ‘யாத்ரா’ படத்தில் பணியாற்றிய அவர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தைகூட நடந்தது. ஆனால் அது கை கூடவில்லை.
தமிழ் நடிகர்களில் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். ‘ஒரு அனாயாசமான கலைஞன்’ என்று கமலைக் குறிப்பிடும் பாலு மகேந்திராவிற்கு மிக நெருக்கடியான ஒரு நேரத்தில் கமல் கை கொடுத்தார்.
‘மறுபடியும்’ படம் முடிந்தவுடன் உச்சக்கட்ட பண நெருக்கடியில் இருந்தார் பாலு மகேந்திரா. பலரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக கமலிடம் கேட்கலாம் என்று அவரைத் தேடிப் போனார்.
உலக சினிமா தொடங்கி எல்லா விஷயங்களையும் பேசிய கமல்ஹாசனிடம் தான் அவரைப் பார்க்க வந்தது எதற்காக என்ற விஷயத்தை பாலு மகேந்திராவால் சொல்ல முடியவில்லை. தனது பிரச்னை பற்றி கமல்ஹாசனிடம் பேச வாய்ப்பே கிடைக்காத நிலையில் பெரும் ஏமாற்றத்துடன் பாலுமகேந்திரா கிளம்பியபோது “ஒரு நிமிடம் இருங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே சென்ற கமல்ஹாசன் திரும்பியபோது அவரது கையில் ஒரு பெரிய கவர் இருந்தது. கமல்ஹாசனிடம் பாலு மகேந்திரா கேட்க நினைத்த தொகையைவிட பல மடங்கு அதிகமான தொகையை அவரிடம் தந்த கமல்ஹாசன் “எனது ராஜ்கமல் நிறுவனத்துக்கு நீங்க ஒரு படம் பண்ணித் தரணும். அதுக்கான முன் பணம்தான் இது…” என்று சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘சதி லீலாவதி’.
“உதவி பெறுகிறோம் என்ற எண்ணம் எனக்குள் வராதபடி மிகவும் கவுரமாக என்னை கமல் நடத்தினார்” என்று அந்த நிகழ்வைப் பற்றி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,