அரிய நட்பு

 திகம்பர சாமியாரைத்’ தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ‘சர்வாதிகாரி’ படத்தில் நடித்த நம்பியார் அதற்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் எல்லா கதாநாயகர்களோடும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்றாலும் எம்.ஜி.ஆர். மீது மட்டும் அளவிட முடியாத அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரும் அவரை நேசித்தார். ஒரு நண்பராக நம்பியாருக்கு கொடுத்திருந்த இடத்தை எம்.ஜி.ஆர். வேறு எந்த நடிகருக்கும் கொடுக்கவில்லை


.















நம்பியாரைவிட எம்.ஜி.ஆர். இரண்டு வயது மூத்தவர் என்ற போதிலும் சினிமாவிலே தனக்கு சீனியர் என்பதால் அவருக்கு உரிய மரியாதையைத் தர எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறியதில்லை.
எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது சிலர் அவரது காலில் விழுந்து வணங்குவார்கள். சிலர் கையெடுத்து கும்பிடுவார்கள். ஆனால், எவரும் அவர் வரும்போது உட்கார்ந்து கொண்டு இருக்க மாட்டார்கள். நம்பியார் மட்டும் அதில் விதிவிலக்கு. எம்ஜிஆர் வரும்போது அவர் எழுந்து நிற்க மாட்டார்.
எம்ஜிஆரை வைத்து பதினாறு படங்களை இயக்கிய ப.நீலகண்டன் கொஞ்சம் கிண்டலான ஆள். எம்.ஜி.ஆர். முன்னிலையில் மற்றவர்களை மாட்டி விடுவதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை.
அவர் இயக்கிக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வந்தபோது வழக்கம்போல உட்கார்ந்து கொண்டிருந்த நம்பியாரைப் பார்த்து “சின்னவர் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களே..?” என்று கேட்டார் ப.நீலகண்டன்.
“எம்ஜிஆர் என்னுடைய நண்பர்.அப்படி இருக்கும்போது அவர் வந்தால் நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று அவரிடம் எதிர்க்கேள்வி கேட்டார் நம்பியார். அப்போது எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுவிட்டு லேசாக சிரித்தபடியே அவர்களைக் கடந்து போனார்.
நம்பியாரின் குடும்ப விழாக்கள் எதுவும் எம்.ஜி.ஆர். இல்லாமல் நடக்காது என்கின்ற அளவிற்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். நம்பியாருக்கு திருமணம் நடைபெற்றபோது அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அதே போன்று நம்பியாரின் மூத்த மகனான சுகுமாரனுக்கு முதல்முதலாக அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றபோது சுகுமாரைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
May be an image of 2 people, people standing and text

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,