வெற்றிக்கொடி கட்டு

 













புலிகளாக பாயந்த ஷமி, பும்ரா, சிராஜ்: பவுலர்கள் தந்த திரில் வெற்றி: லார்ட்சில் இந்தியா அதிசயம்


லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் மிரட்டினர். கடைசி கட்டத்தில் ஷமி, பும்ரா பேட்டிங்கில் அசத்தினர். பின் சிராஜ் உடன் சேர்ந்து 'வேகத்தில்' போட்டுத் தாக்க, இங்கிலாந்து அணி சிதறியது. இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

ங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து, 154 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரிஷாப் பன்ட் (14), இஷாந்த் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.



நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ரிஷாப் (22), இஷாந்த் சர்மாவும் (16) அவுட்டாக, இந்தியா 209/8 ரன் என திணறியது. அடுத்து முகமது ஷமி, பும்ரா இணைந்தனர். இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போல இங்கிலாந்து பவுலர்களை எளிதாக எதிர்கொள்ள, இந்தியா தோல்வியில் இருந்து மீள்வது உறுதியானது.



மொயீன் அலி ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்து, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் எட்டினார் ஷமி. முதல் ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்குமா இந்தியா என ஏக்கத்தில் இருந்த நிலையில், உணவு இடைவேளைக்குப் பின், இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்து அசத்தியது. ஷமி (56), பும்ரா (34) அவுட்டாகாமல் இருந்தனர்.



இரண்டாவது இன்னிங்சில் 60 ஓவரில் 272 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து. பும்ரா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பர்ன்ஸ் 'டக்' அவுட்டானார். அடுத்த ஓவரில் ஷமி, தன் பங்கிற்கு சிப்லேயை 'டக்' அவுட்டாக்க, இங்கிலாந்து 1 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

இஷாந்த் சர்மா, தன் பங்கிற்கு ஹசீப் ஹமீது (9), பேர்ஸ்டோவை (2) வெளியேற்றினார். நீண்ட நேரமாக தொல்லை தந்த ஜோ ரூட்டை (33), பும்ரா அவுட்டாக்கினார். மொயீன் அலி (13), சாம் கர்ரான் என இரு இடது கை பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக்கினார் சிராஜ்.


2 ரன்னில் தப்பிய பட்லர், ராபின்சன் இணைந்து சுமார் 12 ஓவர்கள் தாக்குப்பிடிக்க, போட்டி 'டிரா' ஆகுமோ என அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பம் தந்த பும்ரா, ராபின்சனை (9) அவுட்டாக்கினார். மறுபக்கம் மீண்டும் வேகமெடுத்த சிராஜ், தனது 11 வது ஓவரின் 2வது பந்தில் பட்லரை (25) வெளியேற்ற, இந்தியா பக்கம் போட்டி திரும்பியது. 5வது பந்தில் மற்றொரு இடது கை பேட்ஸ்மேன் ஆண்டர்சனை (0) போல்டாக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 120 ரன்னுக்கு சுருண்டது. 151 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 4, பும்ரா 3, இஷாந்த் 2, ஷமி 1 விக்கெட் சாய்த்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,